யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இரயில் நிலையத்தின் பெயர்ப்பலகையில் தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்பட்டிருப்பதைப் போல் Edit செய்யப்பட்ட புகைப்படம் இது.
பரவிய செய்தி
இதுதான் இன்றைய ஸ்டாலின் திமுக…. இவர்களின் தமிழ் பற்று
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க மூணாவது மொழிய அழிக்குறோம்னு தமிழ அழிச்சு வெச்சிருக்கீங்க

விரிவான விளக்கம்
தேசிய கல்விக் கொள்கையையும் அதில் ஒரு அம்சமான மும்மொழிக் கொள்கையையும் ஏற்றுக்கொண்டால்தான் ’சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நிதியை விடுவிப்போம் என்ற ஒன்றிய அரசின் நிலைப்பாட்டிற்கு தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கத்தினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து எழுந்த ‘இந்தி துணிப்பிற்கு எதிரான’ செயல்பாடுகளின் ஒரு அங்கமாக தபால் நிலையம், இரயில் நிலையம் போன்ற இடங்களில்‘இந்தி எழுத்துகள்’ அழிக்கப்பட்டன.
இந்நிலையில், ’இந்தி எழுத்துகள் அழிப்பு’ போராட்டத்தின் போது, திருவாரூர் இரயில் நிலையத்தின் பெயர்ப்பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை அழிப்பதற்கு பதிலாக ’தமிழ் எழுத்துகளை’ அழித்துவிட்டதாக K.S.ராதாகிருஷ்ணன் என்பவர் ’எக்ஸ்’ தளத்தில் பரப்பிவருகிறார்.
உண்மை என்ன?
பரப்பப்படும் புகைப்படத்தை ’Reverse Image Searching’ முறையில் தேடியதில், 2023 அக்டோபர் மாதம் ‘OneIndia’ செய்தித்தளத்தில் வெளியான செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. இந்த செய்தியில் உள்ள புகைப்படத்தில், ‘திருவாரூர்’ இரயில் நிலையத்தின் பெயர்ப்பலகை இடம்பெற்றிருப்பதைக் காண்கிறோம். இந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த பெயர்ப்பலகை பரப்பப்படும் படத்தில் இருக்கும் பெயர்ப்பலகையை ஒத்திருப்பதிருப்பதை காண முடிகிறது. இரு படங்களிலும் பெயர்ப்பலகைக்கு பின்புலத்தில் உள்ள வீடு, மரம் ஆகியவை ஒரே போல் இருப்பதை காண்கிறோம்.

மேலும், 'YouTurn' சார்பாக திருவாரூர் இரயில் நிலையம் அருகில் இருப்பவர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்தோம். அந்த இரயில் நிலையத்தில் இப்படி தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். 'YouTurn' கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அவர்கள் ‘திருவாரூர்’ இரயில் நிலையத்தின் பெயர்ப்பலகையை புகைப்படம் எடுத்து அனுப்பினார்கள். இந்த புகைப்படம் 26/02/2025 தேதியன்று நேரம் 12:56 PM மணிக்கு எடுக்கப்பட்டதாகும்.

மேற்கூறிய விவரங்களில் இருந்து, இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தில் ’தமிழ் எழுத்துக்கள்’ அழிக்கப்பட்டதாக பரப்பப்படும் புகைப்படம் Edit செய்யப்பட்டது என்பது தெளிவாகிறது.
முடிவு:
இரயில் நிலையத்தின் பெயர்ப்பலகையில் மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருப்பதை வரிசை மாற்றி அதில் மூன்றாவதாக இருக்கும் தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்பட்டிருப்பதைப் போல் Edit செய்யப்பட்டிருக்கிறது.