யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் அப்பாவுவிற்கு ஞானசேகரன் என்பவர் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். இவர் அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்புணர்வு சம்பவத்தில் தொடர்புடையவர் கிடையாது.
பரவிய செய்தி
"என் தம்பி ஞானசேகரன் வழக்கு". பாலியல் குற்றவாளியை சபாநாயகர் பேச்சா இது ? இதுக்கு மேல ஒரு கேடுகெட்ட ஆட்சிய பார்க்க முடியாது.

விரிவான விளக்கம்
அண்ணா பல்கலைக்கழக மாணவியை ஞானசேகரன் என்பவன் பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்புணர்வு செய்தது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவன் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஞானசேகரன் திமுக பொறுப்பாளர் என எதிர்க் கட்சியினரால் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. அவர் திமுக பொறுப்பாளர் கிடையாது என அக்கட்சியின் தரப்பில் பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி ஞானசேகரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்.
அதே நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாலியல் குற்றவாளியை என் தம்பி என பாசமுடன் அழைக்கும் சபாநாயகர் அப்பாவு..
திமுகவின் அனுதாபி , ஆதரவாளர் என்பது சட்டசபையில்… pic.twitter.com/kTgEk5HWmm
ஆனால், தற்போது சபாநாயகர் அப்பாவு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் ‘என் தம்பி ஞானசேகரன் வழக்கில்’ எனக் கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பாஜக மற்றும் அதிமுக ஐடி விங்-கினால் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
ஊடகவியலாளர் நிரஞ்சன் எழுதிய ’இந்தியா வென்றது’ என்ற புத்தக கடந்த 10ம் தேதி (ஜனவரி) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது. இதில், தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ புதியதலைமுறை ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் உள்ளது. அதில், அப்பாவு பேசுகையில் “எனக்கு ஒரு நண்பர் சால்வை அணிவித்தார். அவரது பெயர் என்னவென்று கேட்டேன். ஞானசேகரன் எனச் சொன்னார். அப்படியே அதிர்ந்துவிட்டேன். எப்படி வந்துவிட்டார் எனப் பார்த்தேன். நான் வேறு ஞானசேகரன் என்றார். அப்படிப்பட்ட தம்பி ஞானசேகரன் அவர்களே” என்றுள்ளார். அதாவது, இருவரும் வேறு வேறு நபர்கள் என்பதை அவரது பாணியில் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசுகையில், தனக்குச் சால்வை அணிவித்த ஞானசேகரனை ‘எனது தம்பி’ எனக் கை காட்டிவிட்டு, பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் தொடர்பான வழக்கை மேற்கோள் காட்டுகிறார்.
சபாநாயகர் இப்படிக் கிண்டலாகப் பேசியது பின்னாளில் சர்ச்சையாகுமென ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி அந்த மேடையிலேயே விளக்கம் அளித்துள்ளார்.
மேற்கொண்டு அப்பாவு-விற்கு பொன்னாடை அணிவித்த ஞானசேகரன் குறித்துத் தேடுகையில், அவர் தமிழ்நாடு சிறு, குறு மற்றும் கிராமிய தொழில்முனைவோர் சங்க செயலாளர் எம்.ஞானசேகர் என்பதை அறிய முடிந்தது. இவரை தனது தம்பி எனக் கூறியதை பாலியல் வழக்கில் கைதானவருடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.

இவற்றிலிருந்து சபாநாயகர் அப்பாவு ‘எனது தம்பி ஞானசேகரன்’ எனக் கூறியவரும் பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனும் வெவ்வேறு நபர்கள் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வில் கைதான ஞானசேகரனை எனது தம்பி என அப்பாவு பேசியதாகப் பரவும் தகவல் தவறானது. புத்தக வெளியீட்டு விழாவில் தனக்குப் பொன்னாடை அணிவித்த ஞானசேகரனை தான் தம்பி என அப்பாவு குறிப்பிட்டுள்ளார். இருவரும் வேறு வேறு நபர்கள்.