யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர்களுக்கு இதுவரையில் ஜாமீன் வழங்கப்படவில்லை. தங்கராசு என்பவர் சமீபத்தில் இறக்கவில்லை. கடந்த ஆண்டு கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்த போது இறந்துள்ளார்.
பரவிய செய்தி
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்திற்கு 66 உயிர்களைப் பலி கொண்ட கள்ளச்சாராய வியாபாரிகள் ஜாமீனில் வெளிவந்து, மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சி, தங்கராசு என்பவரைப் பலியிட்டிருக்கிறார்கள்.

விரிவான விளக்கம்
கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். இதில் கைது செய்யப்பட்ட கள்ளச்சாராய வியாபாரிகள் ஜாமீனில் வெளிவந்து மீண்டும் சாராயம் காய்ச்சியதால், அதனைக் குடித்த தங்கராசு என்பவர் உயிரிழந்துள்ளார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே இந்த கன்னுக்குட்டி தான் கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புக்கு குண்டாஸ்ல உள்ள போய் அது ரத்தாகி வெளியே வந்தான். இப்ப திரும்பவும் ஒரு உயிர் போயிருக்கு. கள்ளக்குறிச்சில கள்ளச் சாராய வியாபாரம் மீண்டும் ஜோரா நடக்குது. ஏவல்துறை என்ன பண்ணுதுன்னு அந்த ஆண்டவனுக்கு தான்… pic.twitter.com/BSMgaA9US4
மேலும் அவரது பதிவில், ”ஜாமீனில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கூட கண்காணிக்காமல் மாவட்டக் காவல்துறை செயல்படுகிறது” என்று கூறியுள்ளார்.
உண்மை என்ன?
அண்ணாமலை சொல்வது போல் கள்ளக்குறிச்சியில் தங்கராசு என்பவர் கள்ளச்சாராயம் குடித்து சமீபத்தில் இறந்தாரா என்பது குறித்துத் தேடினோம். இது தொடர்பாக ’இந்து தமிழ் திசை’, ’நியூஸ் 7’ போன்ற ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிர் இழந்தனர். இச்சம்பவத்தன்று கடலூர் மாவட்டம், பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவர் கள்ளக்குறிச்சி நகரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அவரது பிரேதப் பரிசோதனை மற்றும் இரத்த மாதிரி முடிவுகள் தற்போது வந்துள்ள நிலையில், அவர் விஷச்சாராயம் குடித்ததால்தான் உயிரிழந்ததாகத் தெரிய வந்துள்ளது. தங்கராசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் இறந்துள்ளார் என்பதும், அவர் சமீபத்தில் இறக்கவில்லை என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது.
முன்னதாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர். இவ்வழக்கில் பரமசிவம், விஜயா உள்ளிட்ட சிலர் ஜாமீனில் வெளியே வந்தனர். முக்கிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள கண்ணுக்குட்டி, தாமோதரன் உள்ளிட்ட பலருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. இவர்கள் கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

தங்கராசுவின் மரணத்திற்குக் கள்ளச்சாராயம் காரணம் எனத் தெரிய வந்த நிலையில், ஏற்கனவே சிறையில் உள்ள கண்ணுக்குட்டி, தாமோதரன் மீது இது தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் இந்த வழக்கில் வரும் மார்ச் 4-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதிலிருந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர்கள் இதுவரையில் ஜாமீனில் வெளிவரவில்லை என்பது தெளிவாகிறது.
இந்நிலையில், கள்ளச்சாராயம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வந்து மீண்டும் கள்ளச்சாராயம் விற்றதாகவும் இதனால் ஒருவர் உயிரிழந்ததாகவும் அண்ணாமலை கூறும் தகவல் முழுக்க முழுக்க வதந்தியே என்பது தெளிவாகிறது.
முடிவு:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர்களுக்கு இதுவரையில் ஜாமீன் வழங்கப்படவில்லை. தங்கராசு என்பவர் சமீபத்தில் இறக்கவில்லை. கடந்த ஆண்டு கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்த போது இறந்துள்ளார். அவரது பிரேதப் பரிசோதனை முடிவுகள் தற்போது வந்த நிலையில், இது தொடர்பான வழக்கும் கண்ணுக்குட்டி, தாமோதரம் மீது பதியப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அண்ணாமலை சொன்ன தகவல்கள் பொய்யானவை.