யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
விரதம் இருப்பது புற்றுநோய் சிகிச்சையில் நேர்மறையான பலன்களை கொடுக்கிறது என்ற உண்மையை திரித்து, அது புற்றுநோய் செல்களை அழிக்கும் என்று அண்ணாமலை தவறான தகவலை பரப்பி வருகிறார்.
பரவிய செய்தி
24 மணி நேரம் விரதம் இருந்தால் புற்றுநோய் செல்கள் அழிந்துவிடும். ஒரு வாரம் விரதம் இருங்கள் மொத்த புற்றுநோய் செல்களும் அழிந்துவிடும்.
- அண்ணாமலை, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர்.
விரிவான விளக்கம்
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விரதம் இருப்பது பற்றி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. 24 மணி நேரம் விரதம் இருந்தால் புற்றுநோய் செல்கள் அழிந்துவிடும். அனைவரது உடலிலும் புற்றுநோய் செல்கள் இருக்கின்றன. உடலை சுத்தம் செய்ய வேண்டுமென்றால், ஒரு வாரம் விரதம் இருங்கள் மொத்த புற்றுநோய் செல்களும் அழிந்துவிடும். ஆனால் தற்போது நாம் விரதம் இருக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டோம்’ என்று பேசினார்.
இதேபோல், ராஜ ராஜ சோழன் என்ற மருத்துவர், 'விரதம் இருப்பது புற்றுநோய் செல்களை அழிக்கும்' என்று பேசிய வீடியோவும் அண்ணாமலைக்கு ஆதரவாக தற்போது பரப்பப்படுகிறது.
Fasting stops the growth of cancer cells. The cancer cells de-energize and die eventually, says the leading Tamil doctor Raja Raja Chozhan
Sadly, paid DMK coolie like you, who paid money to become doctors, wouldn't have the knowledge or capacity to understand it. https://t.co/fSqTvZ8K5H pic.twitter.com/2Tl34ZlPwp
உண்மை என்ன?
விரதம் இருப்பதால் புற்றுநோய் செல்கள் அழியமோ? என்பது குறித்து தேடினோம். ‘PubMed’ என்ற ஆய்விதழ் தளத்தில் வெளியாகியிருந்த ஆய்வு கட்டுரை ஒன்றில், ‘உண்ணாமல் விரதம் இருப்பதால் புற்று பரவியுள்ள உயிரணுக்கள் (Cancer Cells) தன்னை தகவமைத்துக் கொண்டு வளர்வதற்கான சூழலை கட்டுப்படுத்த முடிகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில், விரதம் இருப்பது எவ்வாறு புற்றுநோய் சிகிச்சைக்கு நேர்மறையான வகையில் உதவுகிறது என்பது குறித்த முழுமையாக இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், ‘European Journal of Clinical Medicine’ என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில், குறிப்பிட்ட இடைவேளைகள் விட்டு உண்ணாமல் விரதம் ‘(Intermittent fasting (IF)’ Insulin-like Growth Factor 1 (IGF-1) என்ற மூலக்கூறுகளை குறைப்பதன் மூலம் புற்று வளர்வதை தடுக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விரதம் இருப்பதால் புற்றுநோய் உயிரணுக்கள் அழிக்கப்படுவதை ஒரு உயிரணு தன்னை தானே அழித்துக்கொள்ளும் ‘Autophagy’ நிகழ்முறையால் நடப்பதாக நம்பப்படுகிறது.
ஆனால் இந்த ‘Autophagy’ என்ற நிகழ்முறை, சில நேரங்களில் உயிரணுக்களில் சிதைந்த புரதங்கள் மற்றும் பிற பகுதிகளை அழித்து புற்றுநோய் பரவாமல் தடுக்கிறது. அதேபோல் சில நேரங்களில் புற்று வளர்ந்து பரவுவதற்கும் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
மேலும், 'விரதம் இருப்பது புற்றுநோய் செல்களை அழிக்கும்' என்று பேசிய ராஜ ராஜ சோழன் என்ற மருத்துவர் புற்றுநோய் நிபுணர் அல்ல. அவர் Naturopathy & Yoga Sciences மட்டுமே படித்திருக்கிறார். இது நவீன அறிவியல் மருத்துவமான MBBS-ல் சேராது என்பது மட்டுமல்ல, இது இந்திய மருத்துவ முறைகளாக அங்கீகரிக்கப்பட்ட சித்தா, ஆயுர்வேத போன்றவற்றில் கூட சேராது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, விரதம் இருப்பது புற்றுநோய் சிகிச்சையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் சொன்னாலும் அது புற்றுநோய்க்கு முழுமையான தீர்வு என்று எங்கும் சொல்லப்படவில்லை.
முடிவு:
உண்ணாமல் விரதம் இருப்பது புற்றுநோய் சிகிச்சையில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் சொல்வதை திரிந்து, அது புற்றுநோய் செல்களை அழிக்கும் என்று என்று தவறான தகவலை அண்ணாமலை பரப்புகிறார்.