யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1100 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. பதவி உயர்வு குறித்த வழக்கு காரணமாக அவை நிரப்பப்படாமல் இருக்கிறது.
பரவிய செய்தி
‘தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 11ஆயிரம் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது’ - அண்ணாமலை.
விரிவான விளக்கம்
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை, ‘தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 11ஆயிரம் தலைமை ஆசிரியர் காலி பணியிடங்கள் இருப்பதாக’ கூறினார்.
மற்றவர்களுக்கு ஒரு ஃபோட்டோ தான் கொண்டு வந்தேன். அன்பில் மகேஷுக்கு ஒரு ஆல்பமே கொண்டு வந்திருக்கிறேன். - திருவெறும்பூர் பிரச்சாரத்தில் ஃபோட்டோக்களை காட்டி அண்ணாமலை ஆவேச பேச்சு#ADMK #annamalai #chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via… pic.twitter.com/gQ7j2HASIf
உண்மை என்ன?
தமிழ்நாட்டில் அரசுகள் பள்ளிகளில் தலைமையாசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து இணையத்தில் தேடினோம். ’இந்து தமிழ் திசை’ செய்தித்தளத்தில் இது குறித்த செய்தியைக் காணமுடிந்தது.
2026 ஜனவரி மாதம் வெளியான இந்த செய்தியில், ’தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் 1,036 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், நீதிமன்ற வழக்குகளின் காரணமாக இந்த பணியிடங்களை நிரப்ப இயலாத நிலை உள்ளதாகவும்’ பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

இதேபோல், தலைமையாசிரியர் பதவி உயர்வு குறித்த வழக்கு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1100 தலைமையாசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதிலிருந்து தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1100 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிகிறது. ஆனால் அண்ணாமலை இதனை மிகைப்படுத்தி 11 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக பொய்யான தகவலைச் சொல்கிறார்.
மேலும், தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை தான் முன்னுரிமை பட்டியலில் பணியமர்த்த வேண்டும்; முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களை இந்த முன்னுரிமை பட்டியலில் சேர்க்கக்கூடாது என்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதனால் தான் இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு:
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1100 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதனை மிகைப்படுத்தி 11 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக பொய்யான தகவலை பரப்புகிறார் அண்ணாமலை.