யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“கேரளாவில் தங்கையை பாலியல் கொடுமை செய்ய வந்தவரின் ஆணுறுப்பை வெட்டிய அண்ணன்” என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை இது கேரளாவில் நடந்த சம்பவம் அல்ல. பங்களாதேஷின் ஃபரித்பூரில் கணவனின் ஆணுறுப்பை மனைவி வெட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ.
பரவிய செய்தி
தங்கையை கற்பழிக்க வந்தவரின் ஆணுறுப்பை வெட்டிய அண்ணன்!!
இந்தியா கேரளாவில் இடம்பெற்றதாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது....

விரிவான விளக்கம்
“கேரளாவில் தங்கையை பாலியல் கொடுமை செய்ய வந்தவரின் ஆணுறுப்பை வெட்டிய அண்ணன்” என்று கூறி சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது NEWS 21 BANGLA TV என்ற பங்களாதேஷை சேர்ந்த ஊடகத்தில் “The Wife Who Cut Off Her Sleeping Husband's Genitals” என்ற தலைப்பில் இது தொடர்பான செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் பங்களாதேஷின் ஃபரித்பூரில் மனைவி தனது கணவர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது பிறப்புறுப்பைத் துண்டித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அந்தப் பெண் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் முக்கிய வார்த்தைகளைத் தேடியபோது, பங்களாதேஷ் ஊடகங்களான Glive24 மற்றும் Ajker Patrika வெளியிட்ட செய்திகள் கிடைத்தன. அதில், இந்தச் சம்பவம் ஜூன் 29 அன்று அதிகாலை ஃபரித்பூர் மாவட்டம், பங்கா என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. சுமையா அக்தர் சுமி என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், குடும்பத் தகராறைத் தொடர்ந்து தனது கணவர் ஹனிஃப் ஷேக்கைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தனது கணவர் மற்ற பெண்களுடன் உறவு வைத்திருப்பதாகவும், நீண்ட காலமாக தன்னை உடல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் சுமி குற்றம் சாட்டியதாக கூறப்பட்டிருந்தது.

முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, வைரலாகப் பரவி வரும் இந்தக் காணொளி கேரளாவைச் சேர்ந்தது அல்ல. பங்களாதேஷின் ஃபரித்பூரில் கணவனின் ஆணுறுப்பை மனைவி வெட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதை கேரளாவில் பாலியல் கொடுமை செய்ய வந்தவர் தாக்கப்படும் காட்சி என்று தவறாகப் பரப்பி வருகின்றனர்.