யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இலங்கையில் சேதமைடைந்த பாலங்களை புனரமைப்பு செய்வதற்காக இந்தியாவில் இருந்து பேலி பாலங்களுக்கான பாகங்கள் கொண்டுவரப்பட்டது உண்மை தான். ஆனால் பரவி வரும் காணொளி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
பரவிய செய்தி
இந்தியாவிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்படும் 110 அடி நீளமுள்ள 10 பாலங்கள்..!!

விரிவான விளக்கம்
கடந்த நாட்களில் இலங்கையை தாக்கிய திட்வா புயல் காரணமாக அதிகளவான மக்கள் உயிரிழந்ததுடன், பலர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கி வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறு சேதமடைந்த பாலங்களை மீண்டும் நிறுவுவதற்காக 110 அடி நீளமுள்ள பாலங்கள் இந்தியாவிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்படுவதாக காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
உண்மை என்ன?
இந்தியாவிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு பாலங்கள் கொண்டு செல்லப்பட்டதை குறித்து தேடினோம். அப்போது தினமணி ஊடகத்தில், “மழையால் தத்தளிக்கும் இலங்கைக்கு நகரும் பாலம்: இந்தியா தொடர்ந்து உதவி” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் இலங்கையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பெய்லி நகரும் பால அமைப்பு மற்றும் நூற்றுக்கணக்கான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை சி-17 குளோப் மாஸ்டர் விமானம் மூலம் அனுப்பியதாக இந்திய தூதரகம் தெரிவித்தது. இந்தப் பாலத்தை உடனடியாக அமைக்க இந்தியாவில் இருந்து பொறியாளர்கள் உள்பட 22 வல்லுநர்களும் சென்றுள்ளதாக தூதரகம் தெரிவித்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் இது குறித்து தேடிய போது, இலங்கை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கை ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் விமானம் கொண்டு வந்த பேலி பாலத்தின் பாகங்கள் செயற்பாட்டு தேவைகளுக்கேற்ப பயன்படுத்தக்கூடியவை என்றும், பாலங்கள் அமைப்பதற்குத் தேவையான பொருட்கள் மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக அமைக்கக்கூடிய 110 அடி நீளமுள்ள இரு வழி பேலி பால அமைப்பும் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய உயர் கமிஷன் தனது பேஸ்புக் பக்கத்தில், இந்திய விமானப்படையின் மற்றொரு C-17 குளோப்மாஸ்டர் விமானம் பெய்லி பாலப் பிரிவுகளை ஏற்றிக்கொண்டு இலங்கையில் தரையிறங்கியது என்று புகைப்படங்களுடன் பதிவிட்டுருந்ததை பார்க்கமுடிந்தது.
இவ்வாறு விமானம் மூலம் பேலி பாலத்தின் பாகங்கள் கொண்டு வரப்பட்டிருந்தாலும், பரவி வரும் வீடியோவில் காட்டப்பட்ட விதத்தில் பாலங்கள் கொண்டுவரப்படவில்லை என்பதை அறிய முடிந்தது. எனவே இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட காணொளியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.
இதனால் decopy. Ai என்ற இணையதளத்தில் பரவி வரும் வீடியோவை பதிவிட்டு சோதித்து பார்த்தோம். அப்போது இது 95% ஏஐ மூலம் உருவாக்கப்ப்பட்ட காணொளி என்பதை உறுதி செய்யமுடிந்தது.

முடிவு:
எனவே, இலங்கையில் சேதமைடைந்த பாலங்களை புனரமைப்பு செய்வதற்காக இந்தியாவில் இருந்து பேலி பாலங்களுக்கான பாகங்கள் கொண்டுவரப்பட்டது உண்மை தான். ஆனால் பரவி வரும் காணொளி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.