யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கேரள உயர்நீதிமன்ற சாலையில் கூடுகட்ட மூன்று நகைக்கடைகளிலிருந்து ஒரு கிலோ தங்கத்தை பறவைகள் திருடிச்சென்றன என்று கூறி பரவும் இந்த வீடியோ போலியானது.
பரவிய செய்தி
கேரள உயர்நீதிமன்ற சாலையில் கூடுகட்ட மூன்று நகைக்கடைகளிலிருந்து ஒரு கிலோ தங்கத்தை பறவைகள் திருடிச்சென்றன. குஞ்சு பொரித்த பின்னரே தங்கத்தை மீட்டெடுக்க முடியும் என்பதால் நகைக்கடை உரிமையாளர்கள் மரத்தின்கீழ் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். ஆனால் பறவைகளுக்கு அது சருகுதாம்!
விரிவான விளக்கம்
கேரள உயர்நீதிமன்ற சாலையில் உள்ள மூன்று நகைக்கடைகளிலிருந்து ஒரு கிலோ தங்கத்தை பறவைகள் திருடிச்சென்று கூடு கட்டியுள்ளன என்று கூறி 32 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் வீடியோவில், தங்க நகைகள் நிறைந்த ஒரு கூட்டில் இரண்டு பறவைகள் அமர்ந்திருப்பதையும் காண முடிகிறது. மேலும் சில பதிவுகளில் இந்த சம்பவம் பெங்களூருவில் நடந்ததாகவும் கூறி பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், “surendra_garhwal__/” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோ ஏப்ரல் 01 அன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் சுயவிவரத்தையும், அவருடைய பதிவுகளையும் ஆய்வு செய்ததில் அவர் ஒரு "AI வீடியோ Creator" என்பதை அறிய முடிந்தது. மேலும் பரவி வரும் வீடியோவைப் போன்றே பல AI வீடியோக்கள் அவர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தன.

எனவே இது AI வீடியோ தானா என்பதை உறுதி செய்ய, “Hive Moderation“ இணையதளப்பக்கத்தில் பரவி வரும் வீடியோவை பதிவேற்றம் செய்து ஆய்வு செய்து பார்த்தோம்.
ஆய்வின் முடிவில் இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ தான் என்பதை உறுதி செய்ய முடிந்தது.
முடிவு:
நம் தேடலில், கேரள உயர்நீதிமன்ற சாலையில் கூடுகட்ட மூன்று நகைக்கடைகளிலிருந்து ஒரு கிலோ தங்கத்தை பறவைகள் திருடிச்சென்று கூடு கட்டியுள்ளன என்று கூறி பரவும் வீடியோ போலியானது என்பதை அறிய முடிகிறது.