யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்டதாகும். இதை உண்மையான புகைப்படம் என நினைத்து தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த முதல்வரும் காலை பத்து மணிக்கு பணிக்கு வந்து வரும்போதே வீட்டிலிருந்து கையில் மதிய சாப்பாடு கொண்டு வந்து தலைமை செயலகத்தில் வைத்து சாப்பிட்டு அப்படியே பணியை மீண்டும் தொடங்கி மாலை நான்கு மணிக்கு வீடடுக்கு சென்றவர்கள் யாராவது உண்டா.. ஒரு அரசு ஊழியர் போல் மக்கள் பணியை செய்யும் முதல்வரே...
தொடரட்டும் உங்களது மக்கள் பணி..

விரிவான விளக்கம்
கடந்த மே 10ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்ற நாளிலிருந்து தினம் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பிப்பதாகவும், புதிய நடைமுறைகளை கொண்டு வருவதாகவும் ஊடகங்களும் தவெக ஆதரவு சமூக வலைத்தளப் பக்கங்களும் பரப்பி வருகின்றன. அவற்றில் பல ஏற்கனவே இருக்கும் நடைமுறைகள் தான் என்பது வேறு விஷயம்.
அந்த வரிசையில், தற்போது முதல்வர் விஜய் காலை 10 மணிக்கு தலைமை செயலகம் வந்து மாலை 4 மணி வரை ஒரு அரசு ஊழியர் போல் பணி செய்வதாகவும், அவர் தலைமை செயலகத்தில் முதல்வர் அலுவலகத்தின் மேசையிலே வீட்டிலிருந்து கொண்டு வந்த மதிய உணவை சாப்பிடுவதாகவும் கூறி ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த முதல்வரும் காலை பத்து மணிக்கு பணிக்கு வந்து வரும்போதே வீட்டிலிருந்து கையில் மதிய சாப்பாடு கொண்டு வந்து தலைமை செயலகத்தில் வைத்து சாப்பிட்டு அப்படியே பணியை மீண்டும் தொடங்கி மாலை நான்கு மணிக்கு வீடடுக்கு சென்றவர்கள் யாராவது உண்டா..
ஒரு அரசு ஊழியர் போல்… pic.twitter.com/VIjbOAvzGS
உண்மை என்ன?
தலைமை செயலகத்தில் முதல்வர் அலுவலகத்திலே விஜய் மதிய உணவு சாப்பிடுவது போன்ற புகைப்படம் அதிகாரப்பூர்வமாக ஏதேனும் பத்திரிகை அல்லது செய்தித்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறதா? என்று இணையத்தில் தேடினோம். ஆனால் அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

இதனால், பரப்பப்படும் இந்த புகைப்படத்தை ‘Gemini AI’ தளத்தில் சோதனை செய்தோம். அதில், இந்த புகைப்படம் செயற்கைத்தனமாக இருப்பதாகவும், ‘முதலமைச்சர்’ என்று எழுதப்பட்டுள்ள எழுத்துகள் கூட Edit செய்யப்பட்டது போல் இருப்பதாகவும், முதல்வர் விஜய்-ன் கை விரல்களும், டிப்பன் பாக்ஸின் வடிவத் தோன்றமும் கூட சரியான அமைப்பில் இல்லை என்றும் குறிப்பிட்டு, இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதாகவே இருக்கமுடியும் என்று "Gemini" இணையதளப் பக்கத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து, பரப்பப்படும் இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்ட ஒன்று என்பது தெரியவருகிறது.
முடிவு:
நம் தேடலில், முதல்வர் விஜய் தலைமை செயலகத்தில் மதிய உணவு சாப்பிடுவது போன்று செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படத்தை உண்மை என்று சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பி வருகிறார்கள் என்பதை தெளிவாக அறிய முடிகிறது.