யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘பாகிஸ்தானில் உள்ள ராவல் பிண்டி கிரிக்கெட் மைதானத்தை தாக்கிய இந்தியா’ என்று கூறி பரவி வரும் புகைப்படங்கள் போலியானவை. இதனை பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
பாகிஸ்தானில் உள்ள ராவல் பிண்டி கிரிக்கெட் மைதானம்.. இந்தியா விளையாடிய பிறகு உள்ள காட்சி..
விரிவான விளக்கம்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறி வைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளும் கடந்த மே 7-ம் தேதி இரவு தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானில் 4 இடங்களிலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்களிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், ‘பாகிஸ்தானில் உள்ள ராவல் பிண்டி கிரிக்கெட் மைதானத்தை தாக்கிய இந்தியா’ என்று கூறி புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. பரவி வரும் புகைப்படத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்று சிதைந்து கிடப்பதைக் காண முடிகிறது.
ராவல்பிண்டி ஸ்டேடியம் 🔥🔥🔥 pic.twitter.com/jI50P1TLy0
இந்தியா பாக்கிஸ்தான் க்கு இடையே நடந்த இரவு ஆட்டத்தில் ராவல்பிண்டி கிரௌண்ட் ஐ இழந்தது பாகிஸ்தான் 😂 pic.twitter.com/19paxjxjsT
உண்மை என்ன?
‘பாகிஸ்தானில் உள்ள ராவல் பிண்டி கிரிக்கெட் மைதானம் என்று கூறி பரவி வரும் புகைப்படங்களை ஆய்வு செய்து பார்த்ததில், இது உண்மையான புகைப்படம் அல்ல என்பதை அறிய முடிந்தது.
மேலும் பரவி வரும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, “Hive Moderation” இணையதளத்தில் பரவி வரும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் "இது
92.6% AI தொழில்நுட்பத்தால் தான் உருவாக்கப்பட்டுள்ளது" என்பதை அறிய முடிந்தது.
மேலும் இதனை உறுதி செய்ய, “Aiornot “ என்ற இணையதளத்திலும் பரவி வரும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து ஆய்வு செய்து பார்த்தோம். இதன் மூலம் பரவி வரும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய முடிகிறது.

முடிவு:
நம் தேடலில், ‘பாகிஸ்தானில் உள்ள ராவல் பிண்டி கிரிக்கெட் மைதானத்தை தாக்கிய இந்தியா’ என்று கூறி பரவி வரும் புகைப்படங்கள் போலியானவை என்பதை அறிய முடிகிறது.