யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சம்பல் நகரின் KHAGGU SARAI பகுதியில் உள்ள பழமையான கார்த்திக் மகாதேவ் கோயிலில் ஹோலி கொண்டாடப்பட்ட காட்சி என்பது தெரியவந்துள்ளது.
பரவிய செய்தி
உத்திரபிரதேசம்,சம்பல் நகரில் 46 வருடங்கள் கழித்து ஹோலி கொண்டாடப்பட்டது. யோசித்துப்பாருங்கள் சுதந்திர இந்தியாவில் பெரும்பான்மை இன மக்கள் தங்கள் மதவிழாவை கொண்டாட 46 வருடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதை சாதித்துக் காட்ட ஒரு மோடி, ஒரு யோகி, சம்பல் எஸ்.பி என பலர் தேவைப்பட்டுள்ளனர்.

விரிவான விளக்கம்
சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கும், மக்களிடையே மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்வதற்காகவும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டிற்கான ஹோலி பண்டிகை கடந்த மார்ச் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது.
அப்போது உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் 46 வருடங்கள் கழித்து ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதாகவும், சுதந்திர இந்தியாவில் பெரும்பான்மை இன மக்கள் தங்களது மதவிழாவை கொண்டாட 46 வருடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வருகின்றது.
_உத்திரபிரதேசம், சம்பல் நகரில் 46 வருடங்கள் கழித்து ஹோலி கொண்டாடப்பட்டது._
_யோசித்துப் பாருங்கள்..._
_சுதந்திர இந்தியாவில் பெரும்பான்மை இன மக்கள் தங்கள் மத விழாவை கொண்டாட 46 வருடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது..!_
_இதை சாதித்துக் காட்ட ஒரு மோடி, ஒரு யோகி, சம்பல் எஸ்.பி என பலர்… pic.twitter.com/lSULH4sf8S
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது HINDUSTAN TIMES இணையதள பக்கத்தில் இது குறித்து செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் 46 வருடங்கள் கழித்து சம்பல் நகரின் KHAGGU SARAI பகுதியில் உள்ள பழமையான கார்த்திக் மகாதேவ் கோயிலில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் இது குறித்து தேடி பார்த்ததில், INDIA TODAY ஊடகத்தின் இணையதள பக்கத்தில் கடந்தாண்டு டிசம்பர் 15ஆம் தேதி செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் 1978ஆம் ஆண்டு நடைபெற்ற மத கலவரத்தால் கார்த்திக் மகாதேவ் கோயில் மூடப்பட்டதாகவும், 46 வருடங்கள் கழித்து மீண்டும் திறக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. அதே போல் ETV BHARAT இணையதள பக்கத்தில், கார்த்திக் மகாதேவ் கோயில் கடந்தாண்டு டிசம்பர் 14ஆம் தேதி திறக்கப்பட்டதாகவும், புதிப்பிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் ஜனவரி 7ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்கு முன்பு சம்பல் நகரில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளதா என்று தேடி பார்க்கையில், NYOOZ UP - UTTARAKHAND என்ற யூடியூப் பக்கத்தில் 2018ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி சம்பல் நகரில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டதாக வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதே போல் ZEE 24 KALAK என்ற செய்தி ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில், 'UP : Stage collapsed in Sambhal during BJP Holi Milan Program' என்ற தலைப்பில் 2019ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
முடிவு
இதன்படி பார்க்கையில் உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் 46 வருடங்கள் கழித்து ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதாக பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை. கடந்த ஆண்டுகளாக உத்தரபிரதேசத்தின் சம்பல் நகரில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது உறுதியானது.