யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
’தாலிக்கு தங்கம்’ திட்டம் 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியிலே சில நடைமுறை காரணங்களுக்காக கைவிடப்பட்டுவிட்டது.
பரவிய செய்தி
”அதிமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்டு வந்த ’தாலிக்கு தங்கம் திட்டம்’ திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுவிட்டது” - இன்பதுரை, அதிமுக ராஜ்யசபா MP.
விரிவான விளக்கம்
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியிலிருந்த போது 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் ’தாலிக்கு தங்கம்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு, பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு 25,000 ரூபாய் பணமும், 8 கிராம் தங்கமும்; கல்லூரி படிப்பை முடித்த பெண்களுக்கு 50,000 ரூபாய் பணமும் 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வந்தது.
சமீபத்தில் ’பேசு தமிழா பேசு’ என்ற யூட்யூப் தளத்திற்கு பேட்டி கொடுத்த அதிமுகவின் ராஜ்யசபா உறுப்பினர் இன்பதுரையிடம் இத்திட்டம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘அதிமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்டு வந்த ’தாலிக்கு தங்கம் திட்டம்’ திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுவிட்டது’ என்று கூறிகிறார்.
உண்மை என்ன?
‘தாலிக்கு தங்கம்’ திட்டம் நிறுத்தப்பட்டது குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். இது குறித்து ’தினமலர்’ செய்தித்தளத்தில் 2022 ஏப்ரல் மாதம் வெளியான செய்தியைக் காணமுடிந்தது.
அதில், எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி ’தாலிக்கு தங்கம்’ திட்டம் குறித்து கேள்வி எழுப்பியது பற்றியும் திமுக சார்பில் அதற்கு பதில் கொடுக்கப்பட்டது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் இந்த கேள்விக்கு, அமைச்சர் கீதா ஜீவன் பதிலளித்து பேசுகையில், ‘இந்த திட்டம் அதிமுக ஆட்சியில் 2018-19 ஆண்டிலே நிறுத்தப்பட்டுவிட்டது. தங்கம் விலை ஏற்றம், இறக்கம் காரணமாக யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. மேலும் கொரோணா காலம் என்பதால் இரண்டு ஆண்டுகளாக எந்த பணியும் நடக்கவில்லை. இதனால் தான் நிறுத்தப்பட்டது’ என்று பதிலளித்தார்.

மேலும் இது குறித்து தேடியபோது, 2023ஆம் ஆண்டும் அக்டோபர் மாதம் ‘The News Indian Express’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியின் படி, ’2021 மே மாதம் ‘தாலிக்கு தங்கம்’ திட்டத்திற்கு பதிலாக பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கும் ‘புதுமைப் பெண்’ திட்டம் செயல்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டதாக’ தெரியவருகிறது.

மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் 2019-ல் ‘தாலிக்கு தங்கம்’ திட்டம் கைவிடப்பட்டதாவும், அதனால் இத்திட்டத்திற்காக வந்த விண்ணப்பங்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் நிலுவையில் கிடப்பதாகவும், அவ்வாறு நிலுவையிலுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் இத்திட்டத்தின் கீழ் தங்கம் வழங்குவதற்காக 117.18 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த செய்தியின் மூலம் தெரிய வருகிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த திட்டம் 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியிலே கைவிடப்பட்டுவிட்டது தெளிவாக தெரியவருகிறது.
முடிவு:
2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியிலே கைவிடப்பட்டுவிட்ட ‘தாலிக்கு தங்கம்’ திட்டத்தை திமுக ஆட்சிக்கு வந்துதான் நிறுத்தி வைத்ததாக அதிமுக ராஜ்யசபை உறுப்பினர் இன்பதுரை தவறான தகவலை பரப்பிவருகிறார்.