யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
NCRB தரசுகளின் படி கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற எந்த குற்றங்களிலும் தமிழ்நாடு இந்திய அளவில் முதல் இடத்தில் இல்லை.
பரவிய செய்தி
’கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்களில் இந்திய அளவில் தமிழ்நாடு தான் முதலிடம்’ - அதிமுக ராஜ்ய சபா MP இன்பதுரை.
விரிவான விளக்கம்
சமீபத்தில் ‘One India’ செய்தித்தளத்திற்கு பேட்டியளித்த அதிமுகவைச் சேர்ந்த ராஜ்ய சபா MP இன்பதுரை, ’திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை ஆகியவற்றில் இந்திய அளவில் தமிழ்நாடு தான் முதலிடமாக இருக்கிறது. திமுகவின் சொந்த வேட்பாளருக்கு கூட இங்கே பாதுகாப்பு இல்லை’ என்று பேசினார்.
யாருக்கும் பாதுகாப்பு இல்லை! @arivalayam வேட்பாளருக்கும் பாதுகாப்பு இல்லை! சாத்தூர் திமுக வேட்பாளர் வீட்டிலும் நகை கொள்ளை! இனி @mkstalin எதை சொல்லி ஓட்டு கேட்பார்?@AIADMKOfficial pic.twitter.com/PoDHupyZGz
உண்மை என்ன?
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் நடந்த கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் குறித்த தரவுகளை NCRB ஆவணங்களில் தேடினோம்.
முதலில், 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட NCRB ஆவணத்தின் படி 2021 முதல் 2023 வரையிலான மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 5057 கொலைகள் நடந்துள்ளன. 2023 ஆண்டில் மட்டும் 1681 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், உத்தர பிரதேசத்தில் இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 10,414 கொலைகள் நடந்துள்ளன. மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தமிழ்நாட்டை விட அதிக கொலைகள் நடந்துள்ளன என்பது தெரியவருகிறது.

அடுத்ததாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நமது ‘You Turn’ பக்கத்தில் ஏற்கனவே எழுதியுள்ளோம். 2023ஆம் ஆண்டு NCRB வெளியிட்ட தரவுகளின்படி, உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என 66,381 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுதான் இந்தியாவிலே அதிகமானதாகும். தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டு மட்டும் 8,943 பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்தவகையில், தமிழ்நாடு 14வது இடத்தில் உள்ளது தெரியவருகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது வரதட்சணைக் கொடுமை, கணவர் வீட்டில் தாக்கப்படுவது (domestic violence) போன்றவையாகும்.பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகள் தனியாக பதிவு செய்துள்ளது NCRB. அதன்படி, தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டில் மட்டும் 365 பாலியல் வன்கொடுமை (Rape) குற்றங்கள் வழக்குகளாக பதியப்பட்டுள்ளது. ஆனால் 10 இந்திய மாநிலங்களில் 1000-துக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் 5194 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 3550 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், மத்தியப்பிரதேசத்தில் 2979 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், மாகாராஷ்டிராவில் 2932 பாலியல் வன்கொடுமை வழக்குகளும் நடந்துள்ளன.

மேலும், தமிழ்நாட்டில் போக்ஸோ சட்டத்தின் கீழ் பல்வேறு வகையான பாலியல் வன்முறைகளால் (including Sexual Harassment) பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் மட்டும் 3465 ஆகும். இதிலும், மகாராஷ்ட்ராவில் 4672 குழந்தைகள், மத்திய பிரதேசத்தில் 3893 குழந்தைகள், உத்தர பிரதேசத்தில் 3855 குழந்தைகள் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்தும் NCRB ஆவணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மகாராஷ்டிரா மாநிலத்தில் 852-ஆகவும், தெலங்கானாவில் 597-ஆகவும், பீகாரரில் 155-ஆகவும், ஆந்திரப் பிரதேசத்தில் 149-ஆகவும் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 116-ஆகவும் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை ‘பூஜ்ஜியமாகும்’. அதாவது, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக ஒருவர் கூட தமிழ்நாட்டில் கடத்தப்படவில்லை.

அதேபோல், NCRB 2023 ஆம் ஆண்டு தரவுகளின்படி, திருட்டு வழக்குகள் அதிகமாக பதிவாகியுள்ள மாநிலங்களில் 89,259 எண்ணிக்கையுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்ததாக பிகார், உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் உள்ளன. இதில் தமிழ்நாடு 5253 திருட்டு வழக்குகளுடன் 9 வது இடத்தில் உள்ளது.

இதிலிருந்து, எந்த குற்றங்களிலும் தமிழ்நாடு முதல் இடத்தில் இல்லை என்பது தெரியவருகிறது.
முடிவு:
கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்களில் இந்திய அளவில் தமிழ்நாடு தான் முதலிடம் என்று அதிமுகவைச் இன்பதுரை தவறான தகவலை பரப்பி வருகிறார்.