யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2022ஆம் ஆண்டிலிருந்து 24 காவல் மரணங்கள் (custodial deaths) நிகழ்ந்துள்ளன. மேலும் 21 மார்ச் 2025 அன்று ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, தமிழ்நாட்டில் தாய்வழி இறப்பு விகிதம் (MMR), ஒரு லட்சம் பேருக்கு 70 இறப்புகளுக்கு கீழே உள்ளன என்ற SDG இலக்கை, எப்போதோ எட்டிவிட்டது என்பதை அறிய முடிகிறது. இந்த இலக்கை இந்தியாவில் எட்டு மாநிலங்கள் மட்டும் எட்டியுள்ளன.
பரவிய செய்தி
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் 37 பேர் காவல்நிலையத்தில் இறந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் பிரசவத்தின் போது இறந்து போயிருக்கிறார்கள் - நடிகர் ரவி

விரிவான விளக்கம்
சின்னத் திரை மற்றும் திரைப்பட நடிகரும், பாஜக ஆதரவாளருமான நடிகர் ரவி, சமீபத்தில் பேசு தமிழா பேசு யூடியூப் பக்கத்திற்கு நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார். அதில் திமுக ஆட்சியில் 37 பேர் காவல்நிலையத்தில் இறந்துள்ளனர் என்றும், நூற்றுக்கும் மேற்பட்டோர் பிரசவத்தின் போது இறந்து போயிருக்கிறார்கள் எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.
உண்மை என்ன?
முதலில் திமுக ஆட்சியில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறியது குறித்து தேடி பார்த்தோம். அப்போது திமுக ஆட்சியில் நடைபெற்ற காவல் நிலைய மரணங்கள் குறித்து வெளியான பட்டியல் ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் திமுக ஆட்சிக்கு அந்த பின்னர் 2022ஆம் ஆண்டிலிருந்து 24 காவல் கொட்டடி மரணங்கள் (custodial deaths) நிகழ்ந்துள்ளன.

சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு தொடர்பான விசாரணையின் போது போலீஸார் கடுமையாக தாக்கியதால் அஜித்குமார் (27) என்ற இளைஞர் கடந்த ஜீன் 28ஆம் தேதி (சனிக்கிழமை) உயிரிழந்தார். இதை வைத்து திமுக ஆட்சியில் நடந்த காவல் கொட்டடி மரணங்கள் குறித்து Youturn ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டுள்ளோம்.
எனவே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 37 காவல் கொட்டடி மரணங்கள் நிகழ்ந்ததாக நடிகர் ரவி பரப்பும் தகவல் பொய்யானதாகும்.
இதையடுத்து தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கானோர் பிரசவத்தின் போது இறந்து போயிருக்கிறார்கள் என்ற தகவலையும் கூறியிருந்தார். இது குறித்து பார்த்த போது, 21 மார்ச் 2025 அன்று ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கிடைத்தது. அதில் தமிழ்நாட்டில் தாய்வழி இறப்பு விகிதம் (MMR), ஒரு லட்சம் பேருக்கு 70 இறப்புகளுக்கு கீழே உள்ளன என்ற SDG இலக்கை, எப்போதோ எட்டிவிட்டது என்பதை அறிய முடிகிறது. இந்த இலக்கை இந்தியாவில் எட்டு மாநிலங்கள் மட்டும் எட்டியுள்ளன என்பதும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு :
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் 37 பேர் காவல்நிலையத்தில் இறந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் பிரசவத்தின் போது இறந்து போனதாகவும் நடிகர் ரவி தவறான தகவலை பரப்பி வந்தது ஆதரத்துடன் நிரூபிக்கப்பட்டது.