யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி இந்துக்களுக்கு எதிராக பேசியதாகப் பரவும் வீடியோ.
பரவிய செய்தி
மோடி என்றைக்கும் பிரதமராக இருக்க மாட்டார். யோகி என்றைக்கும் முதல்வர் ஆக இருக்கமாட்டார் முஸ்லிம்களாகிய நாங்கள் உங்களை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் சூழ்நிலை காரணமாக நாங்கள் அமைதியாக இருக்கிறோம்.. ஆனால் ஆட்சி மாறும் போது இந்துக்களை எங்களிடமிருந்து காப்பாற்றுவது யார்?
விரிவான விளக்கம்
ஏஐஎம்ஐஎம் (All India Majlis-e-Ittehadul Muslimeen) கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி, “மோடி என்றைக்கும் பிரதமராக இருக்கமாட்டார். யோகி என்றைக்கும் முதல்வராக இருக்கமாட்டார். முஸ்லிம்களாகிய நாங்கள் உங்களை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம். சூழ்நிலை காரணமாக நாங்கள் அமைதியாக இருக்கிறோம். ஆனால் ஆட்சி மாறும்போது இந்துக்களை எங்களிடமிருந்து காப்பாற்றுவது யார்?” என்று கூறியதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
🧐👇😱மோடி என்றைக்கும் பிரதமராக இருக்க மாட்டார். யோகி என்றைக்கும் முதல்வர் ஆக இருக்கமாட்டார். முஸ்லிம்களாகிய நாங்கள் உங்களை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்...
— BhaRat tHe🔥! (@ThiBharat) August 22, 2024
சூழ்நிலை காரணமாக நாங்கள் அமைதியாக இருக்கிறோம்..ஆனால் ஆட்சி மாறும் போது... 1/2 pic.twitter.com/LviQOgzbR0
மோடி என்றைக்கும் பிரதமராக இருக்க மாட்டார். யோகி என்றைக்கும் முதல்வர் ஆக இருக்கமாட்டார். முஸ்லிம்களாகிய நாங்கள் உங்களை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்.
— Balaji Devendran (@BalajiDevendra1) August 24, 2024
சூழ்நிலை காரணமாக நாங்கள் அமைதியாக இருக்கிறோம்.ஆட்சி மாறும் போது.இந்துக்களாகிய உங்களை எங்களிடமிருந்து காப்பாற்றுவது யார்? pic.twitter.com/V3wgIIs6e7
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை “Google Reverse Image Search” பயன்படுத்தி தேடிப் பார்த்ததில், கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்தே பரவி வரும் வீடியோ சமூக ஊடகங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது என்பதை அறியமுடிந்தது.
"जब योगी मठ में वापस चला जाएगा, जब मोदी पहाड़ पर चला जाएगा, तब कौन बचाने आएगा तुम को???" pic.twitter.com/qB5D4uVpzW
— Priti Gandhi (@MrsGandhi) December 24, 2021
பரவி வரும் வீடியோ “Aimim- All India Majlis-E-Ittehadul Muslimeen” என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி கான்பூரில் பேசிய வீடியோ என்று குறிப்பிட்டு, இதன் முழுப்பகுதி கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதில் சரியாக 39:12 வது நிமிடத்தில், பேசியுள்ள அசாதுதீன் ஓவைசி, “கான்பூரில் உள்ள ரசூலாபாத் காவல்நிலையத்தில் 80 வயதான முகமது ரபீக் துன்புறுத்தப்பட்டதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அவரது தாடி இழுக்கப்பட்டு அவர்மேல் சிறுநீர் கழிக்கப்பட்டது. இதைச் செய்தது எஸ்ஐ கஜேந்தர் பால் சிங். அவர்கள் தாடியைப் பார்த்து, அதை இழுக்க நினைத்தது அவமானமாக இல்லை, ஆனால் வலிக்கிறது. எங்கள் தாடியை ஏன் வெறுக்கிறீர்கள்?” என்றும் பேசியுள்ளார்.
பின்னர் தொடர்ந்து பேசிய அவர் வீடியோவின் 40 வது நிமிடத்தில், “காவல்துறையினரிடம் இதைச் சொல்ல விரும்புகிறேன். யோகி எப்போதும் முதலமைச்சராக இருக்க மாட்டார். மோடி எப்போதும் பிரதமராக இருக்க மாட்டார். முஸ்லிம்களாகிய நாம், நேரம் காரணமாக அமைதியாக இருக்கிறோம். உங்கள் அநீதிகளை நாங்கள் மறக்க மாட்டோம். அல்லாஹ் தன் சக்தியால் உன்னை அழித்துவிடுவான். காலத்திற்கு ஏற்ப விஷயங்கள் மாறும். அப்போது உன்னை யார் காப்பாற்றுவார்கள்?” என்றும் பேசியுள்ளதைக் காணமுடிகிறது.
இந்நிலையில் காவல்துறையினருக்கு எதிராக அசாதுதீன் ஓவைசி பேசியுள்ள வீடியோவின் ஒரு சிறு பகுதியை மட்டும் எடுத்து, அவர் இந்துக்களுக்கு எதிராக பேசியுள்ளதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை தெளிவாக அறியமுடிகிறது.
மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாதுதீன் ஓவைசி தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்த வீடியோவை கடந்த 2021 டிசம்பர் 24 அன்று பதிவு செய்திருப்பதையும் காண முடிகிறது.
அதில், “Haridwar Genocidal Meet கூட்டத்தில் இருந்து திசைதிருப்பும் வகையில், கான்பூரில் நான் ஆற்றிய 45 நிமிட உரையில் இருந்து 1 நிமிட வீடியோ மட்டும் எடுத்து பரப்பப்படுகிறது” என்று குறிப்பிட்டு அவர் பேசியுள்ள வீடியோவை இரண்டு பகுதிகளாக பதிவு செய்துள்ளதைக் காணமுடிந்தது.
In order to distract from #HaridwarGenocidalMeet, a clipped 1 min video is being circulated from 45 min speech I gave in Kanpur. I’ll set the record straight:
— Asaduddin Owaisi (@asadowaisi) December 24, 2021
1. I did not incite violence or give threats. I talked about POLICE ATROCITIES Here’s the full video in TWO PARTS [Cont] pic.twitter.com/buZWZmVNLa
அதிலும் அவர் கான்பூர் காவல்துறையினருக்கு எதிராக பேசியிருப்பதையே காணமுடிகிறது. இதில் அவர் இந்துக்களுக்கு எதிராகவோ, “ஆட்சி ஒருவேளை மாறினால் இந்துக்களை எங்களிடமிருந்து காப்பாற்றுவது யார்?” என்றோ எந்த இடத்திலும் பேசவில்லை என்பதை தெளிவாக அறியமுடிகிறது.
முடிவு:
நம் தேடலில், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி இந்துக்களுக்கு எதிராக பேசியதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.
