யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2022 ஆண்டு சிறுநீரக பிரச்சனையால் இறந்த சிறுவனின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் அதிக பணம் கேட்டதால் இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
திருப்பதி அரசு மருத்துவமணையில் இறந்த 12 வயது சிறுவனை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் 20,000 பணம் கேட்டதால் bike ல் சடலத்தை எடுத்து சென்ற சிறுவனின் தந்தை! எந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி, அதிகாரத்தில் நுழைந்ததோ! அந்த மாநிலம் மத வெறி பிடிச்சி நாசமா போகுமே தவிர எந்த முன்னேற்றமும் அடையாது.

விரிவான விளக்கம்
மருத்துவமனையில் இறந்த சிறுவனின் சடலத்தை ஒருவர் தூக்கிக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் செல்லும் வீடியோவைப் பதிவிட்டு, ’இந்த சம்பவம் திருப்பதியில் நடந்தது என்றும், ஆம்புலன்ஸ் அதிக பணம் கேட்டதால் இறந்த சிறுவனின் உடலை தந்தை Bikeல் எடுத்துச் சென்றதாகவும், இவையெல்லாம் பாஜக கூட்டணியில் ஆட்சி அமைத்தவுடன் நடக்கிறது என்றும்’ சமூக வலைதளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘THE TIMES OF INDIA’ தளத்தில் செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.
அதன்படி, 2022 ஏப்ரல் மாதம், SVR ரூயா அரசு பொது மருத்துவமனையில், ஜெசேவா என்ற 10 வயது சிறுவன் சிறுநீரக செயலிழப்பு (Kidney Failure) காரணமாக உயிரிழந்தான். சிறுவனின் உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்வதற்கு தனியார் ஆம்புலன்ஸ்கள் ரூபாய் 10,000 வரை கட்டணம் கேட்டுள்ளனர். இது விவசாயக் கூலியாக வேலை செய்யும் இறந்த சிறுவனின் தந்தையால் கொடுக்க முடியாத தொகையாகும்.

இதனைத் தொடர்ந்து, அவரது சொந்த கிராமத்தினர் சிறுவனின் உடலை ஊருக்கு கொண்டு செல்ல இலவசமாக ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்தனர். ஆனால், அந்த ஆம்புலன்ஸையும் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தொழில் பேட்டியின் காரணமாக துரத்திவிட்டனர். இதனால், வேறு வழியின்றி தந்தை சிறுவனின் உடலை இரு சக்கர வாகனத்திலே 90 கி.மீ தூரமுள்ள அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு சென்றுள்ளார்.
இது இரண்டு ஆண்டுகள் பழைய வீடியோவாகும். மேலும், இந்த சம்பவம் நடந்த 2022 ஆண்டு, ஜெகன் மோகன் தலைமையிலான YSR காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த சம்பவம் திருப்பதியில் கூட்ட நெரிசல் காரணமாக நேர்ந்த மரணங்களுடன் மறைமுகமாக இணைத்துப் பேசப்படுகிறது.
திருப்பதியில் ’வைகுண்ட துவார தரிசனம்’ வரும் ஜனவரி 10ஆம் தேதி தொடக்கவுள்ள நிலையில், கடந்த ஜனவரி 8ஆம் தேதி விஷ்ணு நிவாசம் கோவில் அருகில் அதற்கான தரிசன டிக்கெட்டுகள் கொடுக்கும் போது, எதிர்பார்த்ததற்கும் அதிகமான கூட்டம் சேர்ந்ததால் ஏற்பட்ட நெரிசலில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இதிலிருந்து, பரப்பப்படும் வீடியோவிற்கும் சமீபத்தில் திருப்பதியில் கூட்ட நெரிசல் காரணமான ஏற்பட்ட மரணங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெளிவாகிறது.
முடிவு:
2022 ஆண்டு சிறுநீரக பிரச்சனையால் இறந்த சிறுவனின் உடல் இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை, சமீபத்தில் திருப்பதி கோவில் கூட்ட நெரிசலுடன் தொடர்புப்படுத்தி தவறாக பரப்பப்படுகிறது.