யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது வங்கதேசத்தின் பாப்னா மாவட்டத்தின் டோகாச்சி ஒன்றியம் என்ற பகுதியில் குடியிருப்புகளும் வழிபாட்டுத்தளமும் சூறையாடப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவாகும்.
பரவிய செய்தி
#மேற்குவங்கம்!
#அடுத்து கேரளா, அடுத்து தமிழ்நாடு!மதமென பிரிந்ததுனு பாட்டு, பாடுற குரூப்புகளா, முதல்ல உங்களுக்கு தான் விழும்!எழுதி வச்சுக்கோங்க!

விரிவான விளக்கம்
மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சமீபத்தில் 'வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவிற்கு' எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் மூன்று நபர்கள் இறந்ததாகவும், பல சொத்துகள் சேதமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் மத்திய ஆயுத காவல் படை வரவழைக்கப்பட்டது. தற்போது கலவரம் பாதித்த இடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
இந்நிலையில், பெரும் கூட்டம் ஒன்று தகர மேற்கூரையால் கட்டப்பட்ட கட்டிடத்தை அடித்து நொருக்கி, பொருட்களுக்கு தீ வைக்கும் காட்சியை பதிவிட்டு, ‘மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் இவ்வாறு தீ வைத்ததாகவும், அடுத்து கேரளா தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இதுபோல நடக்கும்’ என்றும் சமூக வலைத்தளத்தில் பாஜக ஆதரவளாரால் பரப்பப்படுகிறது.
#மேற்குவங்கம்!#அடுத்து கேரளா, அடுத்து தமிழ்நாடு!மதமென பிரிந்ததுனு பாட்டு, பாடுற குரூப்புகளா, முதல்ல உங்களுக்கு தான் விழும்!எழுதி வச்சுக்கோங்க!😡😡 pic.twitter.com/MYSG6AmxVR
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Jannat Prioty’ என்ற பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. கடந்த மார்ச் 25ஆம் தேதி இந்த வீடியோ பதிவேற்றப்பட்டிருப்பதை காணமுடிகிறது. ”டோகாச்சி ஒன்றியத்தில் உள்ள காயம்கோலைவில் குடியிருப்பு இடிக்கப்பட்டது” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ‘DHAKA POST’ என்ற 'பங்களா மொழி’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, ‘வங்கதேசத்தின் பாப்னா மாவட்டம் டோகாச்சி ஒன்றியத்தில் கயெம்கோலா என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள மதராசாவின் செயலாளர் காசி ஷஹாபுதீன் ஹபீசியா சில நாட்களாக சமூக வலைத்தள பிரச்சாரத்தின் மூலமாக உள்ளூர் மக்களை தூட்டிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, மார்ச் 22ஆம் தேதியன்று குடியிருப்புகளும் மத வழிபாட்டுத்தளமும் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிந்துகொள்ள முடிகிறது.

’பங்களாதேஷ் அவாமி லீக்’ என்ற அமைப்பும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்த வேறொரு வீடியோவை வெளியிட்டுள்ளதைக் காணமுடிகிறது.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த வீடியோ வங்கதேசத்தில் நடந்த வன்முறையின் போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
முடிவு:
கடந்த மார்ச் மாதம் வங்கதேசத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை, இந்தியாவின் மேற்கு வங்கத்தில் நடந்ததாக தவறாக பரப்பிவருகிறார் பாஜக ஆதரவாளர்.