யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
குஜராத்தில் உள்ள நெட்ராங் நகரத்தில் பழங்குடி இனத் தலைவர் பிர்சா முண்டாவின் 150ஆவது பிறந்தநாள் விழா பேரணியின் போது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
ஆரவல்லி மலைகளை பாதுகாக்க போராட்டத்தை மக்கள் ஆரம்பித்துள்ளனர். இந்த அளவு கொடுமை பிரிட்டிஷ்கரான் கூட செய்யல. ஒவ்வொரு மாநில மக்களும் ஒவ்வொரு ரீதியில் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் இந்திய குடிமக்கள் எவனுமே சந்தோஷமாக இல்லை சங்கிகளைத் தவிர.

விரிவான விளக்கம்
ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைத்த குழுவின் பரிந்துரைகளை ஏற்ற உச்ச நீதிமன்றம், ஆரவல்லி மலைத்தொடருக்கான புதிய வரையறை குறித்த உத்தரவை வெளியிட்டது. இந்த மறுவரையறையின் படி, 100 மீட்டருக்கும் அதிக உயரம் கொண்ட பரப்புகள் மட்டும் தான் ஆரவல்லி மலைகளாக (Aravalli hills) ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் 500 மீட்டர் சுற்றளவிற்குள் இவ்வாறு 100 மீட்டருக்கும் அதிக உயரம் கொண்ட மலைகள் இருந்தால் மட்டும்தான் ஆரவல்லி மலைத்தொடர் (Aravalli Range) என ஏற்றுக்கொள்ளப்படும்.
இவ்வாறு உயரத்தை மட்டுமே அளவீடாக கொண்டு ஆரவல்லி மலைத்தொடரை மறு வரையறை செய்வதன் மூலம், இந்த வரையறைக்குள் வராத சிறிய மலைகள், குன்றுகள் ஆகியவற்றில் சுரங்கம் தோண்ட அனுமதி அளிக்கப்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அஞ்சுகின்றனர். இதனால் இந்தியாவில் வடக்கு மாநிலங்களில் இந்த மறு வரையறையை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில், ஒரு நகரத்தின் தெருக்களில் மிக பெரும் அளவில் மக்கள் திரள் பேரணி செல்லும் வீடியோவை பதிவிட்டு, ’இந்த போராட்டம் ஆரவல்லி மலைத்தொடரை பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டம்’ என்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் key frame-களைக் கொண்டு இணையத்தில் தேடியபோது, ‘Nikuu 69’ என்ற யூடியூப் தளத்தில் 2025 நவம்பர் 15ஆம் தேதியன்று வெளியிடப்பட்டிருந்த வீடியோவில் இந்த காட்சியைக் காணமுடிந்தது. அதில் குஜராத் மாநிலத்தில் உள்ள நெட்ராங் என்ற நகரத்தில் பழங்குடி இனத் தலைவர் பிர்சா முண்டாவின் 150ஆவது பிறந்தநாள் விழா பேரணி நடந்த போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தேடியதில், இதே வீடியோ மற்றொரு யூட்யூப் தளத்தில் ‘MLA சைதர் வாசவா’ என்று குறிப்பிட்டு பகிரப்பட்டிருந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு தேடுகையில், ‘Bhaskar English’ என்ற ஆங்கில செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிகிறது. அதன்படி, குஜராத் மாநிலத்தின் டெடியாபடா சட்டமன்ற தொகுதியின் ஆம் ஆத்மி கட்சியின் MLA சைவர் விசவா பிர்சா முண்டாவின் 150ஆவது பிறந்தநாள் விழா பேரணியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றியதாக தெரிய வருகிறது. இந்த செய்தியில் இந்த பேரணியின் போது எடுக்கப்பட்ட வீடியோவும் பதிவிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, பரப்பப்படும் வீடியோ ஆரவல்லி மலைத்தொடர் சம்பந்தமாக நடைபெற்று வரும் போராட்டத்தில் எடுக்கப்பட்டதல்ல என்பது தெரியவருகிறது. இந்த வீடியோ பிர்சா முண்டாவின் 150ஆவது பிறந்தநாள் விழா பேரணியில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
முடிவு:
பிர்சா முண்டாவின் 150ஆவது பிறந்தநாள் விழா பேரணியில் எடுக்கப்பட்ட வீடியோவை ஆரவல்லி மலைத்தொடரை பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டம் என்று தவறாக பரப்பி வருகிறார்கள்.