யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஆண்மைக் குறைவு ஏற்படுத்தும் இரசாயனம் கலக்கப்பட்டதாக எந்த செய்தியிலும் குறிப்பிடப்படவில்லை.
பரவிய செய்தி
தில்லியில் மாதுளை ஜுஸில் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் இரசாயனத்தைக் கலந்து விற்பனை செய்து வந்த அயூப் கான் கைது. கைது செய்யப்பட்டுள்ள அயூப் கான் எனது பாஸ் ஷோயிப்தான் இவ்வாறு கலந்து விற்கச் சொன்னார் என்று உண்மையை கூறியுள்ளான்.

விரிவான விளக்கம்
ஒரு சிறிய கடையில் பழச்சாற்றில் கலப்பதற்காக வைத்திருந்த இரசாயனக் கலவையை காவல்துறை கைப்பற்றும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ‘முஸ்லீம்கள் பழச்சாற்றில் ஆண்மைக் குறைவு ஏற்படுத்தும் இரசாயனத்தைக் கலந்து விற்பனை செய்கிறார்கள்’ என்று பாஜக ஆதரவாளர்களால் ’எக்ஸ்’ தளத்தில் பரப்பப்படுகிறது.
தில்லியில் மாதுளை ஜுஸில் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் இரசாயனத்தைக் கலந்து விற்பனை செய்து வந்த அயூப் கான் கைது.
கைது செய்யப்பட்டுள்ள அயூப் கான் எனது பாஸ் ஷோயிப்தான் இவ்வாறு கலந்து விற்கச் சொன்னார் என்று உண்மையை கூறியுள்ளான். pic.twitter.com/B92HHTabc5
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியதில், ‘INDIA TODAY’ செய்தித்தளத்தில் 2024 செப்டம்பர் மாதம் வெளியான செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.

அதன்படி, ’டெல்லியின் ராஜீந்தர் நகர் பகுதியில் கடை ஒன்றில் பழச்சாற்றில் இரசாயனம் கலக்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அந்த கடையில் சோதனை நடத்தியது. அதில் கிடைத்த இரசாயனப் பொருளைக் கைப்பற்றி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தின் போது கடையிலிருந்த பணியாளர்களான அயூப்கான் மற்றும் ராகுல், கடையின் உரிமையாளர் ஷோயிப் தான் இரசாயனம் கலக்கச் சொன்னதாகக் கூறினர்’ என்பது தெரிய வருகிறது.

மேலும் இது குறித்துத் தேடியதில், ’ETV Bharat’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியில், ‘இந்த கடையில் பணியாளர்களான அயூப்கான் மற்றும் ராகுல் மாதுளை பழச்சாற்றில் இரசாயனம் கலந்ததாகவும், உணவுப் பாதுகாப்பு அதிகாரி அந்த இரசாயனப் பொருளின் சோதனை மாதிரியை எடுத்துச் சென்றதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த இரசாயனப் பொருள் குறித்த சோதனை முடிவுகள் கிடைத்த பின்னர் மேற்படியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, ‘India News’ யூட்யூப் தளத்தில் வெளியான செய்தியிலும் இதே தகவல்கள் குறிப்பிடப்படுகிறது. எந்த செய்தியிலும் ‘ஆண்மைக் குறைவு ஏற்படுத்தும் இரசாயனம் கலக்கப்பட்டதாக’ குறிப்பிடப்படவில்லை.
ராகுல் என்ற நபரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கும் நிலையில், இதில் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பதாக மதவாதக் கண்ணோட்டத்தில் பரப்புகிறார்கள்.
முடிவு:
கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பழைய சம்பவத்தை முஸ்லீம் வெறுப்பு கண்ணோட்டத்தில் தற்போது பாஜக ஆதரவாளர்கள் திரித்துப் பரப்புகிறார்கள். மேலும், ‘ஆண்மைக் குறைவு ஏற்படுத்தும் இரசாயனம் கலக்கப்பட்டதாக’ பொய்யான தகவலைப் பரப்புகிறார்கள்.