யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோ 2015 ஆண்டு வாரணாசி நகரத்தில் கங்கை நதியில் விநாயகர் சிலை கரைப்பது தொடர்பான பிரச்சனையின் போது எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
கும்பமேளாவுக்கு குளிக்கச் சென்ற சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் அவர்களை காவல்துறை ஏவி மரண அடி அடித்துள்ளது ஆளும் பாஜக அரசு.. உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சங்கராச்சாரியார் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விரிவான விளக்கம்
உத்தரப் பிரதேச அரசால் ’உலகின் மிகப்பெரிய மதக் கூடுகை’ என்று பெருமையாகப் பிரச்சாரம் செய்யப்பட்ட கும்பமேளா 45 நாட்களாக நடக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. இதில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி பிரயாக்ராஜ் நகரில் நடந்த கும்பமேளா நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் ஏற்பட்ட 30 பேர் இறந்தனர். ’இந்த இறப்புகள் குறித்து தவறான தகவல்களைக் கொடுத்து சன்னியாசிகளைக் குழப்பியதாக’ உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது சங்கராச்சாரியார் அவிமுகேஷ்வரானந்த சரஸ்வதி குற்றம் சாட்டினார்.
கும்பமேளாவுக்கு குளிக்கச் சென்ற சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் அவர்களை காவல்துறை ஏவி மரண அடி அடித்துள்ளது ஆளும் பாஜக அரசு.உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சங்கராச்சாரியார் அனுமதிக்கப்பட்டுள்ளார்
ஆரம்பம் முதலே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் செய்து வரும் அட்டூழியம் pic.twitter.com/9nz47kRf4o
இந்நிலையில், காவி உடை அணிந்த ஒருவரை காவல்துறை தடியால் அடிக்கும் காணொளியைப் பதிவிட்டு, ’ஆளும் பாஜக அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருவதன் காரணமாக பாஜக அரசு காவல்துறையை ஏவி சங்கராச்சாரியார் அவிமுகேஷ்வரானந்த்-ஐ அடித்ததாக’ சமூக வலைத்தளத்தில் திமுக ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில்,‘First India News’ என்ற செய்தி ஊடகத்தின் யூட்யூப் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. 2015 செப்டம்பர் 23 அன்று பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோவின் Description-ல் ‘விநாயகர் சிலையைக் கங்கை நதியில் கரைப்பது குறித்து ஏற்பட்ட பிரச்சனையில், மக்கள் காவல்துறை மீது கற்களை வீசியதாகவும், இதனைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய தடியடியில் 15 நபர்கள் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த சம்பவம் குறித்துத் தேடுகையில் ’The Indian EXPRESS’ செய்தித்தளத்தில் இதுபற்றிய செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, இந்தச் சம்பவம் வாரணாசி நகரத்தில் நடந்ததாகவும் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தா இந்த போராட்டத்தை நடத்தியதாகவும், 25 நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த வீடியோ 2015 ஆண்டு வாரணாசி நகரத்தில் கங்கை நதியில் விநாயகர் சிலை கரைப்பது தொடர்பான பிரச்சனையின் போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
முடிவு:
2015ஆம் ஆண்டு கங்கை நதியில் சிலை கரைப்பது தொடர்பான பிரச்சனையின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை திரித்து, தற்போது நடந்து வரும் கும்பமேளாவில் குளிக்கச் சென்ற சங்கராச்சாரியாரை காவல்துறை தாக்கியதாகத் தவறான தகவலைப் பரப்புகிறார்கள்.