யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள ’வஸ்த்ரல்’ என்னும் பகுதியில் இரண்டு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நடந்த சம்பவமாகும்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இரு சக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்துகிறார்கள். மேலும், சாலையில் செல்லும் பிற வாகனங்களை நிறுத்தி, வாகன ஓட்டிகளைத் தாக்குகிறார்கள். இதனை காட்சிபடுத்தும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் கோலிப் பண்டிகையின் போது நடந்தது என்று பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ‘INDIA TODAY’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காண முடிந்தது. அதில், ’அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள ’வஸ்த்ரல்’ என்னும் பகுதியில், 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல், கத்திகள் மற்றும் தடிகளுடன் சாலையில் வந்து வாகனங்களைச் சேதப்படுத்தியதோடு மக்களையும் தாக்கியதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ’சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை தாக்கியதோடு, பாதசாரிகளையும் தாக்கியிருக்கிறது இந்த கும்பல். தெருவிலிருந்த கடைகள் சூறையாடப்பட்டிருக்கின்றன. சாலையில் வந்துகொண்டிருந்த கார் ஒன்றை நிறுத்தி அதில் உள்ளவர்களை தாக்கியிருக்கிறார்கள்’ என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
’இரண்டு எதிரெதிர் கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும்’ இந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

’வஸ்த்ரல் பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவம் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்ததாகும். இது சம்பந்தமான தகவல் கிடைத்ததும் காவல் ஆய்வாளர் ராமோல் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றார். இதுவரை 13 நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்’ என்று அகமதாபாத் நகர காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ’எக்ஸ்’ பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டிருக்கிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து இந்த வெறியாட்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள ’வஸ்த்ரல்’ என்னும் பகுதியில் நடந்தது என்பதை தெளிவாக அறிய முடிகிறது.
முடிவு:
அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள ’வஸ்த்ரல்’ என்னும் பகுதியில் இரண்டு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நடந்த சம்பவமாகும் இது. இதனை உத்தரப் பிரதேசத்தில் கோலிப் பண்டிகை கொண்டாட்டத்தின் போது நடந்ததாகத் தவறாகப் பரப்புகிறார்கள்.
