யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
யானைக்கும், ஒரு குட்டி யானைக்கும் உடம்பில் தீ பற்றி எரிவதைக் காட்டும் புகைப்படம் கேரளாவில் எடுக்கப்பட்டதாகக் கூறி செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
கேரளம்
விரிவான விளக்கம்
குட்டியானை உடம்பில் தீ பற்றி எரிவதைக் காட்டும் புகைப்படம் கேரளாவில் எடுக்கப்பட்டதாகக் கூறி செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் பரவி வரும் பதிவுகளில், இவ்வாறு கேரளாவில் நடப்பதால்தான், வயநாடு நிலச்சரிவு போன்ற சம்பவங்கள் அங்கு நடக்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.
வயநாடு காணமல் போனதற்கு காரணம் https://t.co/LLbthPuV9c
— Ravi chandran. K Ravi (@Ravicha91135963) August 24, 2024
உண்மை என்ன?
பரவி வரும் யானையின் புகைப்படத்தை “Google Reverse Image Search” மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், இது கேரளாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பதை அறியமுடிந்தது.
‘National Geographic’ இணையதளப் பக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பரவி வரும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு “இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில், ஒரு ஆசிய யானைக்குட்டியும் அதன் தாயும் நெருப்பு தார் உருண்டைகளை எறியும் ஒரு கும்பலிடம் இருந்து தப்பி ஓடுகின்றன“ என்று குறிப்பிட்டு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.

இதே போன்று, ‘BBC Gujarat’ ஊடகப் பக்கத்திலும், பரவி வரும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 08 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதில், “இந்த புகைப்படம் புகைப்படக்காரர் பிப்லாப் ஹஜ்ராவால் தனது கேமராவில் படம்பிடிக்கப்பட்டது. இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள பாங்குடாவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், குட்டியானை ஒன்று தீ பற்றிய நிலையில் உள்ளதைக் காணலாம். பிப்லாப் ஹஜ்ராவின் இந்தப் படத்திற்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் சமூக ஊடகங்களில் யானையின் உடம்பில் தீ பற்றியதாகப் பரவி வரும் புகைப்படம் மேற்குவங்கத்தில், கடந்த 2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை உறுதிபடுத்தமுடிகிறது.
முடிவு:
நம் தேடலில், குட்டி யானையின் உடம்பில் தீ பற்றி எரிவதைக் காட்டும் புகைப்படம் கேரளாவில் எடுக்கப்பட்டதாகக் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.
