யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த புகைப்படத்தில் இருக்கும் மக்கள் இந்தியர்கள் அல்ல. இவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மக்கள்.
பரவிய செய்தி
மோடியின் நண்பன் என டிரம்பை தலையில் தூக்கி வைத்தும், கோவில் கட்டியும் கொண்டாடிய சங்கிகளா...
இந்திய நாட்டு பிரஜைகளை நாட்டைவிட்டு துரத்த ஆதரவளித்த அமெரிக்கவாழ் சங்கிகளுக்கு டிரம்ப் வைத்த ஆப்பைப் பார்த்தீர்களா??

விரிவான விளக்கம்
கடந்த பிப்ரவரி 5 அன்று, அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியதாகச் சொல்லி 104 இந்தியர்களை அமெரிக்க அரசு இராணுவ விமானத்தின் மூலம் இந்தியா திருப்பி அனுப்பியது. டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற இரண்டு வாரத்திற்கு உள்ளாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த திருப்பி அனுப்பும் விமான பயணத்தின் போது சுமார் 40 மணிநேரம் இந்தியர்களின் கை கால்களில் விலங்கு (Handcuffs) மாட்டி அழைத்துவரப்பட்டுள்ளனர். மேலும், இந்த பயணத்தின் போது கழிவறை செல்வதற்கும், உணவு உண்பதற்கும் கூட இந்தியர்கள் விலங்கில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இவ்வாறு அமெரிக்க அரசாங்கத்தால் மனிதத்தன்மையற்ற முறையில் இந்தியர்கள் நடத்தப்பட்டது நாடு முழுவதும் பேசு பொருளானது.
இந்நிலையில், இராணுவ விமானம் ஒன்றில் மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, ’மோடியின் நண்பர் என்று சொல்லப்படும் டிரம்ப் அரசாங்கம் இந்தியர்களைக் கையாளும் முறையைப் பாருங்கள்’ என்று ’எக்ஸ்’ தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் புகைப்படத்தைக் கொண்டு ‘Reverse Image Searching’ முறையில் தேடியதில், ‘ALJAZEERA’ செய்தித்தளத்தில் செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.

காபூல் நகரத்தின் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தின் வழியாக ஆப்கானிஸ்தானை விட்டு மக்கள் வெளியேறவதைப் பற்றிக் குறிப்பிடும் இந்த செய்தியில் பரப்பப்படும் இந்த புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தின் கீழ் எழுதப்பட்டுள்ள குறிப்பில், ’2021 ஆகஸ்ட் 15 அன்று, காபூல் நகரத்திலிருந்து கத்தாருக்கு 640 ஆப்கானிஸ்தான் மக்கள் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலமாக வெளியேறியதை’ பற்றிக் குறிப்பிடுகிறது.
‘BBC’ செய்தி நிறுவனமும் இதே புகைப்படத்தைப் பயன்படுத்தி ஆப்கான் மக்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறியதைப் பற்றி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கப் படை ஆப்கானிஸ்தானில் இருந்து விலகிக்கொண்டது. இதனால் தாலிபான் அமைப்பு மீண்டும் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இதனால் பீதியுற்ற ஆப்கானிஸ்தான் மக்கள் பலர் அந்நாட்டை விட்டு வெளியேறினார்கள். அதில் ஒரு பகுதியாக 2021 ஆகஸ்ட் 15 அன்று 600க்கும் மேற்பட்ட ஆப்கான் மக்கள் அமெரிக்க இராணுவ விமானத்தின் மூலம் வெளியேறினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
இதிலிருந்து இந்த புகைப்படம் மூன்று ஆண்டுகள் பழையது என்பதும், வெளியேறிய மக்கள் ஆப்கான் மக்கள் என்பதும் தெளிவாகிறது. இந்தப் புகைப்படத்திற்கும் அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்ட விவாகரத்திற்கும் தொடர்பு ஏதுமில்லை.
முடிவு:
இந்த மூன்று ஆண்டுகள் பழைய புகைப்படத்தை, சமீபமாகச் சட்ட விரோதமாகக் குடியேறியதாகச் சொல்லி இந்தியர்களை அமெரிக்க அரசு இராணுவ விமானத்தின் மூலம் திருப்பி அனுப்பிய விவகாரத்துடன் இணைத்து தவறாகப் பரப்புகிறார்கள்.