யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்தப் புகைப்படம் தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த 2020 ஆண்டு நிதித்துறை செயலாளராக பணியாற்றிய போது எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
பட்ஜெட் தயாரிப்புக்கும் இந்திய தேர்தல் கமிஷனருக்கும் என்ன சம்பந்தம்? இவனுக்கு அங்க என்ன வேலை.???

விரிவான விளக்கம்
கடந்த பிப்ரவரி 1 அன்று 2025ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் கோப்புடனும், அவருடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் பலர் உள்ள குழுப் புகைப்படத்தைப் பதிவிட்டு, ’பட்ஜெட் தயாரிக்கும் போது தலைமைத் தேர்தல் ஆணையருக்கு என்ன வேலை?’ என சமூகவலைத்தளத்தில் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆதரவாளர்களால் பரப்பப்பட்டது.
பட்ஜெட் தயாரிப்புக்கும் இந்திய தேர்தல் கமிஷனருக்கும் என்ன சம்பந்தம்? இவனுக்கு அங்க என்ன வேலை.??? pic.twitter.com/kVRFrviXSz
உண்மை என்ன?
பரப்பப்படும் புகைப்படத்தைக் கொண்டு ’Reverse Image Searching’ முறையில் தேடியதில், MINT செய்தித்தளத்தில் 2020 பிப்ரவரி 1ஆம் தேதியில் வெளியான கட்டுரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோர் இருக்கும் புகைப்படத்தைக் காணமுடிந்தது.

மேலும், ’Business Standard’ செய்தித்தளத்தில் அதே 2020 பிப்ரவரி 1ஆம் தேதியில் வெளியான செய்தி ஒன்றில், பரப்பப்படும் அதே புகைப்படத்தைக் காணமுடிந்தது. இதிலிருந்து இந்தப் புகைப்படம் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
மேலும் இதுகுறித்து தேடுகையில், கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ராஜீவ் குமார் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ‘தேர்தல் ஆணையராக’ இருந்ததாகவும், 2022ஆம் ஆண்டு மே 15 அன்று 25வது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னதாக ராஜீவ் குமார் நிதித்துறை செயலாளராக ஜீலை 2019 முதல் பிப்ரவரி 2020 வரை பணியாற்றியிருப்பதாக இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் தேடியதில், ஓய்வு பெற்ற IAS அதிகாரியும் முன்னாள் நிதித்துறை செயலாளருமான ராஜீவ் குமார் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதாக 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று வெளியான செய்தியைக் காணமுடிகிறது.

இதிலிருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜீவ் குமார் ஆகியோர் இருக்கும் இந்தப் புகைப்படம் அவர் நிதித்துறை செயலாளராக இருந்தபோது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
முடிவு:
தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமார், 2020 ஆண்டு நிதித்துறை செயலாளராக இருந்தபோது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை, தற்போது பட்ஜெட் தயாரிப்புக் கூட்டத்தில் நிதியமைச்சருடன் தலைமைத் தேர்தல் ஆணையர் கலந்துகொண்டார் என்று தவறாகப் பரப்பப்படுகிறது.