யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘நிற்காமல் சென்ற லாரி திமுகவினர் உடையது. அதனால் தான் லாரி மதிக்காமல் போக்குவரத்து காவலரையும் ஏற்றி சென்றுள்ளது’ என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை.
பரவிய செய்தி
திமுக காரனே போலீஸ்னா நிக்க மாட்டான். திமுக காரன் லாரி மட்டும் நிக்கவா போகுது. போலீஸையும் தூக்கிட்டு போகும்ல அதான்..
விரிவான விளக்கம்
சாலையில் லாரி ஒன்று கட்டுபாட்டை மீறி சாலையில் வேகமாக செல்வது போன்றும், லாரியில் காவலர் ஒருவர் தொங்கிக் கொண்டே செல்வது மாதிரியுமான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் பதிவுகளில், ‘நிற்காமல் சென்ற லாரி திமுகவினர் உடையது. அதனால் தான் லாரி மதிக்காமல் போக்குவரத்து காவலரையும் ஏற்றி சென்றுள்ளது’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது குறித்து “Thanthi TV“ மே 20 அன்று செய்தி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
இச்செய்தியின் மூலம், பரவி வரும் வீடியோ, செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியில் லாரி ஒன்று கடத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதையும், இருசக்கர வாகனத்தில் சென்ற காவல் சிறப்பு ஆய்வாளர் பாலமுருகன், லாரியை பிடித்து தொங்கியபடி 10 கிமீ தூரத்துக்கு பயணம் செய்து குற்றவாளியை பிடித்துள்ளார் என்பதையும் அறிய முடிந்தது.
மேலும் இது குறித்து, “Oneindia Tamil“ ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “போலீசார் நடத்திய விசாரணையில், லாரியை கடத்திச் சென்றவர் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பது தெரியவந்தது. சுபாஷ் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசியதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பரனூர் சுங்கச்சாவடி அருகே லாரியை கடத்திய விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் சுபாஷை ஆஜர்படுத்தினர். சுபாஷை, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுபாஷ்“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இது குறித்து, “Thanthi TV“ “சென்னையின் ஹீரோவான போலீஸ் முருகன் - தேடிப்போய் பாதம் தொட்டு கவுரவித்த லாரி ஓனர்” என்று குறிப்பிட்டு மற்றொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், ‘நிற்காமல் சென்ற லாரி திமுகவினர் உடையது. அதனால் தான் லாரி மதிக்காமல் போக்குவரத்து காவலரையும் ஏற்றி சென்றுள்ளது’ என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியில் லாரி ஒன்று மனநலம் பாதிக்கப்பட்டவரால் கடத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிந்தது.