யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது கடந்த 2022-ம் ஆண்டு கொரோனா காலக் கட்டத்தின் போது, சத்தியம் டிவியில் ஒளிபரப்பான செய்தியாகும். மேலும் பரவி வரும் செய்தி போலியானது என்பதை சத்தியம் டிவி தனது சமூக வலைதளப்பக்கங்களிலும் உறுதி செய்துள்ளது.
பரவிய செய்தி
இதை விட கேவலமான அரசியல் எங்கே இருக்க முடியும், முருகர்மாநாடை எப்பாடு பட்டாவது நடக்க விடக்கூடாது, இவளோ கூட்டம் சேர்ந்துட்டா பிஜேபி உள்ளே வந்திடும்...கழகம் நாசமாக போகும் காலம் நெருங்குகிறது..அதன் அறிகுறிகள் தான் இவை...வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...ஒன்று சேருவோம்...கழகத்தை துரத்துவோம்...

விரிவான விளக்கம்
மதுரையில் வருகிற 22-ந் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளதாக வீடியோ ஒன்று வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில் முருகன் மாநாட்டை நடக்க விடக்கூடாது என்பதற்காக தான் பொதுமுடக்கம் என்று பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை என்ன?
முதலில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தரப்பில் பொது முடக்கம் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகியுள்ளதா என்பது குறித்துத் தேடிய போது, எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதும் உறுதியானது.

இதையடுத்து பரவி வரும் காணொளி SATHIYAM TV ஊடகத்தின் செய்தி என்பதைப் பார்க்கமுடிந்தது. அப்போது அந்த செய்தி ஊடகத்தின் யூடியூப் பக்கத்திற்குச் சென்று தேடிய போது, "தமிழகத்தில் ஞாயிறன்று முழு ஊரடங்கு | Tamil Nadu | Lockdown | Corona | Sathiyamtv" என்ற தலைப்பில் 5 ஜனவரி, 2022 அன்று இந்த செய்தி வெளியாகியிருந்ததைப் பார்க்கமுடிந்தது. அதில் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
இந்த காணொளியை எடுத்தே முருகர் மாநாட்டைத் தடுக்கும் வகையில் ஞாயிறு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை பாஜகவினர் பரப்பி வருவது தெரியவந்தது.
அதே போல், ஜூன் 17, 2025 அன்று சத்தியம் டிவி தனது எக்ஸ் பக்கத்தில், பரவி வரும் செய்தி தவறானது என்பதை உறுதி செய்துள்ளதையும் பார்க்க முடிந்தது.
கொரோனா பரவல் காரணமாக ஞாயிறன்று பொதுமுடக்கம் என வைரலாகும் செய்தி தவறானது #sathiyamtv #sathiyamnews #FakeNews #TNfactCheck #Corona pic.twitter.com/eDIjdWvSRf
முடிவு :
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், இது கடந்த 2022-ம் ஆண்டு கொரோனா கால கட்டத்தின் போது சத்தியம் டிவியில் வெளியான செய்தியாகும். இதை முருகன் மாநாட்டை நடக்க விடக்கூடாது என்பதற்காகத் தான் பொது முடக்கம் என்று பாஜகவினர் தவறாகப் பரப்பி வருகின்றனர்.