யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த சம்பவம் கடந்த 2023ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தின் ஷீரடி என்ற ஊரில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்றதாகும்.
பரவிய செய்தி
*நேற்று கோவை சாய்பாபா கோயில்* கேட் 2 அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியில் ஒருவித கெமிக்கல் பொடியை தூவியவுடன் கார் கண்ணாடி சத்தமில்லாமல் உடைகிறது. பிறகு காருக்கு உள்ளே உள்ள பேக்கை திருடி செல்கிறான். எச்சரிக்கை பதிவு காரில் *விலையுயர்ந்த பொருட்களை வைத்துவிட்டு செல்லாதீர்கள்*.

விரிவான விளக்கம்
ஒரு நபர் பார்க்கிங்-ல் நிறுத்தப்பட்டிருக்கும் கார் கண்ணாடியை உடைத்து, காரில் உள்ள பையத் திருடிச் செல்லும் CCTV காட்சியை பதிவிட்டு, ‘இந்த திருடன் கெமிக்கல் பொடியைத் தூவி கார் கண்ணாடியை சத்தமில்லாமல் உடைத்ததாகவும், இந்த சம்பவம் சமீபத்தில் கோவையில் உள்ள சாய்பாபா கோவிலில் நடந்ததாகவும்’ சமூக வலைதளமான ‘எக்ஸ்’-ல் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடியதில், ‘SP 24 TAAS’ என்ற யூட்யூப் தளத்தில் இந்த வீடியோ காணக்கிடைக்கிறது. இந்த வீடியோ இந்த யூட்யூப் தளத்தில் 2023 அக்டோபர் 2ஆம் தேதி, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஷீரடி நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலின் VIP வாயில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து திருட்டு நடைபெற்றதாகவும் இந்த யூட்யூப் வீடியோவின் Description-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வீடியோவை கவனமாக உன்னிப்பாக பார்க்கும்போது, அந்த நபர் கெமிக்கல் பொடி எதையும் தூவுவதாக தெரியவில்லை. மாறாக, அந்த நபர் கவன் போன்ற பொருளைக் கொண்டு கண்ணாடியை உடைப்பதை பார்க்க முடிகிறது.
மேற்கூறிய விவரங்களில் இருந்து, இந்த சம்பவம் மகாராஷ்ட்ர மாநில அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் நடந்திருப்பது தெளிவாகிறது.
முடிவு:
கடந்த 2023ஆம் ஆண்டு மகாராஷ்ட்ர மாநிலம் ஷீரடி சாய்பாபா கோவிலில் நடந்த சம்பவத்தை தற்போது (2025 ஜனவரி 21 அன்று) நடந்ததாக தவறாக பரப்புகின்றனர்.