யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
துருக்கி, லிபியா, எகிப்து, சூடான், லெபனான், சிரியா, ஜோர்டான், துனிசியா, ஈராக் போன்ற இஸ்லாமிய நாடுகளில் Religious Endowments, Foundations போன்ற பெயர்களில் வக்ஃப் சொத்துகளை நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள் உள்ளன.
பரவிய செய்தி
டர்க்கியில் இல்லை, லிபியாவில் இல்லை, எகிப்தில் இல்லை, சூடானில் இல்லை, லெபனாரில் இல்லை, சிரியாவில் இல்லை, துனிசியாவில் இல்லை, ஈராக்கில் இல்லை. இப்படி இஸ்லாமிய நாடுகளிலேயே இல்லாத "வக்ஃபு போர்டு" உங்களுக்கு ஏன் இந்தியாவில் வேண்டும்? மக்கள் நிலத்தை கொள்ளை அடிக்கவா??

விரிவான விளக்கம்
கடந்த ஏப்ரல் 2ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் வக்ஃப் திருத்த மசோதா மீது விவாதங்கள் நடைபெற்றபோது, பாஜக MP சம்பித் பத்ரா ‘துருக்கி, லிபியா, எகிப்து, சூடான், லெபனான், சிரியா, ஜோர்டான், துனிசியா, ஈராக் போன்ற இஸ்லாமிய நாடுகளில் கூட வக்ஃப் வாரியம் இல்லை, ஏன் இந்தியாவில் மட்டும் வேண்டும்?’ என்று பேசினார்.
பாஜக MP சம்பித் பத்ரா இவ்வாறு பேசிய இந்த வீடியோவை தற்போது பாஜகவைச் சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகிறார்கள்.
டர்க்கியில் இல்லை
லிபியாவில் இல்லை
எகிப்தில் இல்லை
சூடானில் இல்லை
லெபனாரில் இல்லை
சிரியாவில் இல்லை
துனிசியாவில் இல்லை
ஈராக்கில் இல்லை
இப்படி இஸ்லாமிய நாடுகளிலேயே இல்லாத "#வக்ஃபு_போர்டு" உங்களுக்கு ஏன் இந்தியாவில் வேண்டும்? மக்கள் நிலத்தை கொள்ளை அடிக்கவா?? 🔥 pic.twitter.com/nI8RrsEJI5
உண்மை என்ன?
மேற்குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் வக்ஃப் சொத்துகளை நிர்வாகம் செய்யக்கூடிய அமைப்புகள் இருக்கிறதா என்று இணையத்தில் தேடினோம்.
துருக்கி:
துருக்கி நாட்டின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் ’FOUNDATIONS’ என்ற பெயரில் வக்ஃப் சொத்துகளை நிர்வாகம் செய்யும் அமைப்பு இருப்பது தெரிய வருகிறது.

லிபியா:
லிபியா நாட்டில் ‘General Authority Of Awqaf And Islamic Affairs’ என்ற அமைப்பு வக்ஃப் சொத்துகளை நிர்வாகம் செய்ய அமைக்கப்பட்டுள்ளது. இங்கே ’வக்ஃப்’ நன்கொடைகள் ‘Endowments’ என்று அழைக்கப்படுகிறது.

மேலும், இணையத்தில் உள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்று, லிபியா நாட்டில் வக்ஃப் நன்கொடைகள் குறைந்து வருவதாகவும், அதனால் வக்ஃப் நன்கொடையை பணமாகவே அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் பேசுகிறது.
எகிப்து:
எகிப்து அரசாங்கத்தின் கீழ் செயல்படும் ‘Ministry of Endowments’ என்ற அமைச்சகத்தின் கீழ் வக்ஃப் நன்கொடைகள் நிர்வகிக்கப்படுவதும், அதிலிருந்து சமூக பணிகள் மேற்கொள்ளப்படுவது குறித்தும் அறிகிறோம்.

சூடான்:
சூடான் அரசாங்கத்தின் கீழ் செயல்படும், ‘Minister of Religious Affairs and Endowments’ என்ற நிர்வாகம் வக்ஃப் சொத்துகளை கையாள்வதில் ஊழல் செய்துள்ளதாக செய்தி ஒன்றைக் காணமுடிகிறது.

மேலும், ’சூடானில் வக்ஃப் நிறுவனத்தின் மறுமலர்ச்சி’ என்ற ஆய்வுக் கட்டுரையில், 19 நூற்றாண்டுகள் தொடங்கி வக்ஃப் சொத்துகளை சரியாக பராமரிக்கப்படாமல், பயன்படுத்தப்படமால் இருப்பதாகவும், அதனை சரி செய்வதற்காக மீட்டெடுக்கப்பட்ட வக்ஃப் நிறுவனம் கடந்த பத்தாண்டுகளில் எவ்வாறு பயனளித்தது என்பது பற்றியும் ஆராயப்பட்டுள்ளதை பார்க்கிறோம்.

ஜோர்டான்:
ஜோர்டான் நாட்டின் அரசாங்கத்தின் கீழ் ’Ministry of Endowments and Islamic Affairs’ என்ற அமைச்சகத்தில் ‘அறக்கட்டளை மேம்பாட்டுத் துறை’ என்ற துறை செயல்பட்டுவருவதை அறிகிறோம்.

லெபனான்:
லெபனான் குடியரசில் உள்ள ’Dar al-Fatwa’ என்ற நிறுவனம் லெபனானில் மத விவகாரங்களையும், நன்கொடை, தொண்டு, சமூகப் பணி போன்ற காரியங்களை மேற்பார்வையிடுவதை அறிகிறோம்.

‘லெபனானில் வக்ஃப் சட்ட ஆட்சி: ஒரு கண்ணோட்டம்’ என்ற சிறு விளக்கக் கட்டுரையையும் காணமுடிகிறது.
சிரியா:
சிரியா2வில் ‘Ministry of Awqaf’ பாத்திரம் பற்றியும், அது வக்ஃப் சொத்துகளை கையாளும் விதம் பற்றியும், 2018ஆம் கொண்டுவரப்பட்ட சட்டம் ஒன்றைப் பற்றியும் ஒரு கட்டுரையின் வழியாக அறிய முடிகிறது.

துனிசியா:
துனிசியாவில் ஹபீப் போர்குய்பா ஜனாதிபதியாக இருந்தபோது, 1957 வக்ஃப் நிறுவனம் ஒழிக்கப்பட்டதாகவும், அதனை திரும்ப கொண்டுவர வேண்டிய தேவைகள் இருப்பதாகவும் வலியுறுத்தும் கட்டுரைகளை காணமுடிந்தது.

ஈராக்:
ஈராக் நாட்டில் வக்ஃப் நிறுவனங்கள் இருப்பது பற்றியும், அதில் ஷியா, சன்னி வக்ஃப் நிறுவனங்களுக்கு இடையில் தகராறுகள் இருப்பது பற்றியும் கட்டுரைகளைக் காணமுடிகிறது.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, துருக்கி, லிபியா, எகிப்து, சூடான், லெபனான், சிரியா, ஜோர்டான், துனிசியா, ஈராக் போன்ற இஸ்லாமிய நாடுகளில் Religious Endowments, Foundations போன்ற பெயர்களில் வக்ஃப் சொத்துகளை நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள் உள்ளன என்பது தெளிவாகிறது.
முடிவு:
துருக்கி, லிபியா, எகிப்து, சூடான், லெபனான், சிரியா, ஜோர்டான், துனிசியா, ஈராக் போன்ற இஸ்லாமிய நாடுகளில் வக்ஃப் நிறுவனங்கள் இருப்பதை மறைத்து பாஜக MP சம்பித் பத்ரா நாடாளுமன்றத்தில் தவறான தகவலை கொடுத்துள்ளார்.