யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் ₹500 ரூபாய் நோட்டுகளே அதிகமாக புழக்கத்தில் இருப்பதால், 100 அல்லது 200 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பொதுமக்களுக்கு அதிகமாக வழங்குவதை உறுதி செய்யவே ரிசர்வ் வங்கி ஏப்ரல் 28 அன்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனை தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
செப்டம்பர் - 1 முதல் ATMகளில் 500 ரூபாய் நோட்டு வழங்கபடாது. 100, 200 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு. அடுத்த புதிய இந்தியா பொறக்க போகுது.
விரிவான விளக்கம்
செப்டம்பர் 01 முதல் ATMகளில் 500 ரூபாய் நோட்டு வழங்கப்படாது. 100, 200 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாகக் கூறி செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிய, இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது குறித்து ஆய்வு செய்தோம்.
வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் ₹500 ரூபாய் நோட்டுகளே அதிகமாக புழக்கத்தில் இருப்பதால், 100 அல்லது 200 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பொதுமக்களுக்கு அதிகமாக வழங்குவதை உறுதி செய்யவே ரிசர்வ் வங்கி ஏப்ரல் 28 அன்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அந்த அறிவிப்பில், “அடிக்கடி பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அணுகுவதை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, அனைத்து வங்கிகளும், வெள்ளை லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்களும் (WLAOs) தங்கள் ஏடிஎம்கள் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டு அதற்கான காலக்கெடுவதையும் அறிவித்துள்ளது.
அதன்படி "செப்டம்பர் 30, 2025க்குள், அனைத்து ஏடிஎம்களிலும் 75 சதவீதம் குறைந்தது ஒரு கேசட்டில் ((பணம் வைக்கும் பெட்டி) இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க வேண்டும். மார்ச் 31, 2026க்குள், அனைத்து ஏடிஎம்களிலும் 90 சதவீதம் குறைந்தது ஒரு கேசட்டில் (பணம் வைக்கும் பெட்டி) இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க வேண்டும்” என்றும் அறிவித்துள்ளது.
இதனை, “Economic Times“ வெளியிட்டுள்ள செய்தியிலும் உறுதிபடுத்த முடிகிறது.

இந்நிலையில், RBI-இன் இந்த அறிவிப்பை பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், செப்டம்பர் - 1 முதல் ATMகளில் 500 ரூபாய் நோட்டு வழங்கப்படாது என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.