யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தொப்பூர் கணவாயில் மீண்டும் கோர விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
மீண்டும் தொப்பூர் கணவாயில் மிகப்பெரிய விபத்தாம்
விரிவான விளக்கம்
தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொப்பூர் கணவாய் பகுதி, பல கோர விபத்துகளுக்கு காரணமான ஒரு பகுதியாக உள்ளது. மொத்தம் 400 மீட்டர் தொலைவு மட்டுமே கொண்ட தொப்பூர் கணவாய் பகுதியில் இதுவரை, கடந்த 9 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் மட்டும் கிட்டத்தட்ட 1000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தொப்பூர் கணவாயில் மீண்டும் கோர விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் வீடியோவில் கண்டெய்னர் லாரி ஒன்றின்மீது பல கார்கள் மோதி விபத்துக்குள்ளாகி இருப்பதைக் காண முடிகிறது.


உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை ‘Google Reverse Image Search’ மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு ‘Bhaskar‘ என்ற இணையப் பக்கத்தில் ஆகஸ்ட் 15 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

எனவே இந்த செய்தி குறித்து இணையத்தில் மேலும் தேடினோம். ‘Ibc24’ ஊடகப் பக்கத்தில் இது குறித்து வெளியிட்டிருந்த செய்தியில், “மத்திய பிரதேச மாநிலம் தார் நகரில் அமைந்துள்ள மும்பை ஆக்ரா நான்கு வழிச்சாலையில் பயங்கர விபத்து நடந்துள்ளது. கண்டெய்னர் 6 கார்களை தாக்கியது, இதில் இரண்டு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து நேர்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தை தொடர்ந்து 2 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் ‘Times of India’ ஊடகத்தில் இந்த விபத்து சம்பவம் குறித்து ஆகஸ்ட் 17 அன்று வெளியிடப்பட்டிருந்த செய்தியில், மத்தியப்பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் அமைந்துள்ள கணபதி காட் என்ற இடத்தில் வியாழன் (ஆகஸ்ட் 15) அன்று 6 கார்கள் மீது கண்டெய்னர் மற்றும் லாரி மோதியதில் 18 வயது பெண் உயிரிழந்தார் மற்றும் 7 பேர் காயமடைந்தனர். இந்த மாதத்தில் நடந்த இரண்டாவது சம்பவம் இதுவாகும். மதியம் இந்தூரில் இருந்து தாம்னோட் நோக்கி சென்று கொண்டிருந்த டிரக் ஒன்றின் ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்ததாக காக்கட்டா (Kakadda) புறக்காவல்நிலையப் பொறுப்பாளர் எஸ்ஐ மிதுன் சௌஹான் தெரிவித்துள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்மூலம் பரவி வரும் வீடியோ, மத்தியப்பிரதேசத்தில் கடந்த 15ஆம் தேதி ஏற்பட்ட விபத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறியமுடிகிறது. இதனை பலரும் தமிழ்நாட்டில் உள்ள தொப்பூர் கணவாயில் நடைபெற்ற விபத்து சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டில் உள்ள தொப்பூர் கணவாயில் மீண்டும் கோர விபத்து என்று கூறி பரவும் வீடியோ, மத்தியபிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்பதை உறுதிபடுத்த முடிகிறது.
