யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கர்நாடகாவில் கத்தியைக் காட்டி பொது மக்களை மிரட்டிய நபரைக் காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததை உத்தரப்பிரதேசத்தில் நடந்ததாகப் பொய் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
உத்திரபிரதேசம் மாநிலம் சாஹரன்பூர் சண்டே மார்க்கெட்டில் அந்த ஊரைச் சேர்ந்த ரவுடி அப்துல் கஃபார் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி கொண்டிருந்த பொழுது, உத்திரபிரதேச போலீஸ் எடுத்த செல்லநடவடிக்கை
இது நம்மூர் மாதிரி கஞ்சா கம்பெனி மாடல் இல்லை. பாரத தேசத்தின் அடுத்த பிரதமர் யோகிஜி மாடல்

விரிவான விளக்கம்
உத்தரப்பிரதேச மாநிலம் சாஹரன்பூர் மார்க்கெட்டில் கத்தியைக் காண்பித்து பொது மக்களை மிரட்டிய நபரை அம்மாநில காவல் துறை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது என வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. இந்த நடவடிக்கை உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சிறப்பு என பாஜக ஆதரவாளர்கள் வீடியோவை பரப்புகின்றனர்.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோ குறித்துத் தேடியதில், 2023, பிப்ரவரி 6-ம் தேதி ‘Times Of India’ தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில் கத்தியைக் காட்டி பொது மக்களை மிரட்டிய நபர் காவல் துறையினரால் காலில் சுட்டுப் பிடிக்கப்பட்டதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் பரவக் கூடிய வீடியோவுடன் தொடர்புடைய காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

’நியூஸ் 18’ யூடியூப் பக்கத்திலும் இச்சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவுடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
‘India Today’ தளத்தில் இது பற்றி வெளியான செய்தியில், கத்தியைக் காட்டி மிரட்டிய பைசல் பகவான் என்ற நபரிடம் இருந்து தற்காத்துக் கொள்ளவும் பொது மக்களைப் பாதுகாக்கவும் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்நபரிடம் விசாரணை செய்து வருகிறோம் என்றும் காவல் கண்காணிப்பாளர் சொன்ன தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நபர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றிலிருந்து பரவக் கூடிய வீடியோ கர்நாடகா மாநிலத்தில் நடந்து என்பதை அறிய முடிகிறது. இது உத்தரப்பிரதேசம் எனத் தவறாகப் பரப்பப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த 2023, பிப்ரவரியில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி செய்ததும் பசவராஜ் பொம்மை முதலமைச்சராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி செய்யக்கூடிய பாஜக அரசுக்கு எதிராகக் கேள்வி எழுப்புபவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது சட்டத்திற்குப் புறம்பானது என எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், அரசின் இச்செயலை பாஜகவினர் ஆதரித்துப் பேசுவதுண்டு. அப்படித்தான் இந்த சம்பவத்தையும் கூறுகின்றர்.
முடிவு:
கர்நாடகாவில் கத்தியைக் காட்டி பொது மக்களை மிரட்டிய நபரைக் காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இது உத்தரப்பிரதேசத்தில் நடந்ததாகப் பொய் செய்தி பரப்பப்படுகிறது.