யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்தியா விலக முடிவு என்று கூறி பாலிமர் செய்தி, தினத்தந்தி, தினகரன், மாலை மலர், Tamil Wire, விகடன், CricTamil மற்றும் Asia Net உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், நேபாளம் உள்ளிட்ட ஆசிய கிரிக்கெட் அணிகளை உள்ளடக்கி ஆசிய கிரிக்கெட் வாரியம் செயல்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆடவருக்கு தனியாகவும், மகளிருக்கு தனியாகவும் நடத்தப்படுகிறது.
இந்தியாவில் ஆடவர் போட்டியும், இலங்கையில் மகளிருக்கான போட்டியும் இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. மேலும் தற்போது ஆசிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்தியா விலக முடிவு என்று கூறி பாலிமர் செய்தி, தினத்தந்தி, தினகரன், மாலை மலர், Tamil Wire, விகடன், CricTamil மற்றும் Asia Net உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட தாக்குதலை தொடர்ந்து தான், பிசிசிஐ இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அச்செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், “sportstarweb“ எக்ஸ் பக்கத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்பது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதில், “பரவி வரும் செய்திகள் எந்த உண்மையும் இல்லாதவை. ஆசிய கோப்பை கிரிக்கெட் குறித்து BCCI எதையும் விவாதிக்கவில்லை. எங்களுடைய கவனம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும் IPL மற்றும் அதைத் தொடர்ந்து வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இங்கிலாந்து தொடர்கள் இரண்டிலும் தான் உள்ளது - பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
#BCCI secretary Devajit Saikia clarified that no decision has been taken regarding India's participation in tournaments affiliated with the Asian Cricket Council.@ShayanAcharya reports.
Details: https://t.co/jXhXhXO03B pic.twitter.com/yoDqIpECLP
இதே போன்று, “The Week” ஊடகப் பக்கத்தில் நேற்று (மே 19) வெளியிடப்பட்டுள்ள செய்தியிலும் “ஆசிய கிரிக்கெட் போட்டிகள் குறித்து பிசிசிஐ வாரியம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், நிகழ்வுகளில் இருந்து விலகும் எந்த நோக்கத்தையும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஏசிசி) தெரிவிக்கவில்லை“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது
இதனை “ANI” வெளியிட்டுள்ள செய்தியின் மூலமும் உறுதிபடுத்த முடிந்தது.
இதன் மூலம், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்தியா விலக முடிவு என்று கூறி பாலிமர் செய்தி, தினத்தந்தி, தினகரன், மாலை மலர், Tamil Wire, விகடன், CricTamil மற்றும் Asia Net உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்தியா விலக முடிவு என்று கூறி ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் தவறானவை என்பதையும், ஆசிய கோப்பைகளில் இந்தியா பங்கேற்பது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்த முடிகிறது.