யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சுகாதாரமற்ற முறையில் கோவையில் பானிபூரி விற்பனை செய்யப்படுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
பழம்பெருமை வாய்ந்த தமிழ் ஊடகங்கள் இதை விரைவில் தங்கள் செய்திகளில் கொண்டு வர வேண்டும்

விரிவான விளக்கம்
கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி அருகில் சுகாதாரமற்ற முறையில் பானிபூரி விற்பனை செய்யப்படுவதைப் பாருங்கள் என்று கூறி 2:20 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் வீடியோவில், பானிபூரி விற்பனை செய்யும் நபர், பானி இருக்கும் பானையினுள் கை கழுவுவதும், அதற்குள் கைகளை விட்டு கலக்குவதும் என சுகாதாரமற்ற முறையுல் பானிபூரி விற்பதை தெளிவாகக் காணமுடிகிறது.
இதனை இந்து மக்கள் கட்சியினர், பாஜகவினர் உட்பட பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருகிறார்கள்.
கோவை பிஎஸ்ஜி அருகில் pic.twitter.com/vjevoJQhIY
— Vinoth Kumar.V ( மோடியின் குடும்பம் ) (@Vinoth2214) July 19, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், இது முதன்முதலாக "சஞ்சனா கல்ரானி" என்ற கன்னட நடிகையின் ஃபேஸ்புக் பக்கத்தில் "இது பலருக்கும் நடந்திருக்கலாம்" என்று குறிப்பிட்டு கடந்த மே 08 அன்று பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. மேலும் வீடியோவின் இறுதியில், "இது போன்ற வியாபாரிகளிடமிருந்து ஜாக்கிரதையாக இருங்கள்" என்று காட்டப்படுவதையும் காண முடிகிறது.
மேலும் அதில் "மறுப்பு: பார்த்ததற்கு நன்றி! இந்தப் பக்கத்தில் சித்தரிக்கப்பட்ட நாடகங்கள் மற்றும் கேலிக்கூத்துகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும். இந்த குறும்படங்கள் பொழுதுபோக்கு மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே! இந்த வீடியோவில் உள்ள கதாபாத்திரங்களும் பொழுதுபோக்கு மற்றும் கல்வி நோக்கத்திற்காக உள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது.

மேலும் "சஞ்சனா கல்ரானி" என்பவரது ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்ததில், இது போன்ற பல புனைவு வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.

இதன் மூலம் சித்தரிக்கப்பட்ட வீடியோவை, கோயம்புத்தூரில் நடந்த சம்பவம் என்று கூறி, இந்து மக்கள் கட்சியினர், பாஜகவினர் உட்பட பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. ஆனால் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பதற்கான தகவல்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.
மேலும் படிக்க: இந்தியாவில் செயற்கை மாம்பழம் தயாரிக்கப்படுவதைப் பாருங்கள் என்று கூறி பரவும் சித்தரிக்கப்பட்ட போலி வீடியோ!
முடிவு:
நம் தேடலில், கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி அருகில் சுகாதாரமற்ற முறையில் பானிபூரி விற்பனை செய்யப்படுவதாகப் பரவும் வீடியோ போலியானது என்பதை அறிய முடிகிறது.