யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, ரெகுநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் அறங்காவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நர்க்கீஸ்கான் ஒரு இஸ்லாமியர் அல்ல.
பரவிய செய்தி
பெருமாள் கோவில் அறங்காவலராக இஸ்லாமியரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறை... இதுபோல் மசூதி பொறுப்புகளில் ஒரு இந்துவை தமிழக அரசு நியமிக்குமா? இது திட்டமிட்டு இந்து கோவில்களை அழிக்கும் முயற்சி..!! தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா நெடுந்தெரு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராஜகோபால பெருமாள் கோவிலின் அறங்காவலராக நர்கீஸ் கான் என்கிற இஸ்லாமியரை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நியமித்திருக்கிறார்கள்.

விரிவான விளக்கம்
பெருமாள் கோவில் அறங்காவலராக இஸ்லாமியரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறை என்று கூறி பாஜக தலைவர் எச். ராஜா பதிவு ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
அப்பதிவில், “பெருமாள் கோவில் அறங்காவலராக இஸ்லாமியரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறை... இதுபோல் மசூதி பொறுப்புகளில் ஒரு இந்துவை தமிழக அரசு நியமிக்குமா? இது திட்டமிட்டு இந்து கோவில்களை அழிக்கும் முயற்சி..!! தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா நெடுந்தெரு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராஜகோபால பெருமாள் கோவிலின் அறங்காவலராக நர்கீஸ் கான் என்கிற இஸ்லாமியரை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நியமித்திருக்கிறார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் கடவுளாக ஏற்றுக் கொள்ளாத இஸ்லாமியர் எப்படி இந்து கோவில்களை பராமரிப்பார்.
அவர் எப்படி கோவில்களில் வழிபாடு நடத்துவார். இந்து சமய அறநிலையத்துறையில் வேற்று மதத்தவர்கள் இருக்கக் கூடாது என HRCE சட்டம் இருக்கும்பொழுது அதை மீறி சட்டத்திற்கு விரோதமாக ஒரு இஸ்லாமியரை எப்படி நியமிக்க முடியும்..? இஸ்லாமிய அறங்காவலருக்கு இந்துக்களின் ஆகம விதிகள் எப்படி தெரியும்..? இதுபோல் மசூதி பொறுப்புகளில் ஒரு இந்துவை தமிழக அரசு நியமிக்குமா? இது திட்டமிட்டு இந்து கோவில்களை அழிக்கும் முயற்சியாகவே நாங்கள் பார்க்கிறோம். எனவே உடனடியாக இஸ்லாமிய அறங்காவலரை நீக்கிவிட்டு, இஸ்லாமியரை அறங்காவலராக நியமித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் மீது பற்றுள்ள இந்து அறங்காவலரை நியமிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்து அறநிலையத்துறை
இந்துக்களின் நம்பிக்கைகளுக்கும்,
இந்திய சட்டங்களுக்கும் ஏற்ப
செயல்படவேண்டும்.
இல்லையேல் அந்தத்துறை
தாமாகவே கோவில்களை விட்டு
வெளியேற வேண்டும்🙏🕉️ https://t.co/fY4qDzLOJl
உண்மை என்ன?
பரவி வரும் செய்தியின் உண்மைத் தன்மையை அறிய தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, ரெகுநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசிய போது, அறங்காவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நர்க்கீஸ்கான் ஒரு இஸ்லாமியர் அல்ல. இந்து மதத்தை சேர்ந்தவர் தான் என்பதை அறிய முடிந்தது.
மேலும் இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள நர்க்கீஸ்கான் , “தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, ரெகுநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் அறங்காவலராக என்னை 15 நாட்களுக்கு முன் நியமித்தார்கள். அறங்காவலர் குழுவில் நானும் ஒரு உறுப்பினர். என்னுடைய பெயர் நர்க்கீஸ்கான். நான் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவன் எனக் கூறி பெரும்பாலானோர் அவதூறு பரப்புகிறார்கள். நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன் தான்.
தயவு செய்து இந்த அவதூறை நிறுத்துங்கள். மேலும் அறங்காவலர் துறை அதிகாரிகளிடம் என்னுடைய பள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC), பாஸ்போர்ட் என எல்லாவற்றையும் கொடுத்துள்ளேன். மிகச் சிக்கலான நிலையில் பிரசவம் அமைந்தததால், பிரசவம் பார்த்த மருத்துவர் நர்க்கீஸ்கானின் பெயரை எனக்கு வைத்துள்ளார்கள். மற்றபடி நான் இந்து தான்” என்றும் அதில் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாஜக தலைவர் எச். ராஜா மதவாதத்தை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பியது உறுதியானது.
முடிவு:
நம் தேடலில், பெருமாள் கோவில் அறங்காவலராக இஸ்லாமியரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறை என பாஜக தலைவர் எச். ராஜா பரப்பிய செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.