யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திமுக கூட்டணியிலிருந்து வெளியேறு!, திருமாவுக்காக ஒட்டப்பட்ட போஸ்டர் என்று கூறி விசிக தலைவர் தொல். திருமாவளவனின் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டி ஒன்றின் புகைப்படம் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
திமுக கூட்டணியிலிருந்து வெளியேறு!, திருமாவுக்காக ஒட்டப்பட்ட போஸ்டர் என்று கூறி விசிக தலைவர் தொல். திருமாவளவனின் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டி ஒன்றின் புகைப்படம் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் பரவி வரும் சுவரொட்டியில், “வெளியேறு! வெளியேறு!! தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறு!! ஒரு இடத்திற்காக 39 தொகுதியில் உழைக்க வேண்டுமா! தம்பிகள் இருக்கின்றோம்.. தயங்காதே! 2G யை நாம் சுமக்கவேண்டாம். தனித்தன்மையோடு சிதம்பரத்தில் மீண்டும் வெற்றி பெறுவோம். - இவண், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிதம்பரம் நகரம்“ என்று அதில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் சுவரொட்டியின் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது 2014-ல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது.
மேலும் தேடியதில், Tami Indian Express ஊடகப் பக்கத்தில் பரவி வரும் இதே சுவரொட்டியைக் குறிப்பிட்டு கடந்த 2018 செப்டம்பர் 20 அன்று “என்ன போஸ்டர் அது? நாங்கள் ஒட்டவில்லை! சிதம்பரத்தை கலக்கிய போஸ்டர் குறித்து திருமாவளவன் விளக்கம்! “ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதில், “கடந்த இரண்டு தினங்களாக சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசிக சார்பில் ஓட்டப்பட்டிருந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, “திமுக கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியேற வேண்டும் என ஒரு சுவரொட்டியின் படத்தை விஷமிகள் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் அப்படியொரு சுவரொட்டியை எங்கும் ஒட்டவில்லை” என்று கூறியுள்ளார்” என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், ”தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறு!!” என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புகைப்படத்தைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி கடந்த 2014-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதையும், இதை விசிகவினர் ஒட்டவில்லை என்று அப்போதே அவர் விளக்கமளித்துள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.