யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அமைச்சர் பேசியதை திரித்து தினமலர் செய்தி ஊடகம் நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக்கும் உண்மை போல் பரப்பி வருகிறார்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கடந்த சில ஆண்டுகளாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்வது குறித்து அமைச்சர் சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அதில் ”கோடையில் மது அருந்த வேண்டாம்; மது குடிக்கக்கூடாது என்றால், மதுக்கடைகள் திறந்திருக்கிறதே என்கின்றனர்.
மெடிக்கல் ஷாப்பில் விஷம் கூடத்தான் இருக்கிறது. எது தேவை என்று அறிந்து எடுத்துக்கொள்வதே சிறந்தது” என்று அமைச்சர் கூறியதாக கடந்த மாதம் 30ஆம் தேதி தினமலர் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக்கும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எந்த மெடிக்கல் ஷாப்பில் விஷம் விற்கப்படுகிறது அமைச்சரே?@Subramanian_ma pic.twitter.com/B1NIdMRCgn
Archived Link
உண்மை என்ன ?
பரவி வரும் NEWS CARD-ல் இருப்பதை போல் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டியளித்துள்ளாரா என்பது குறித்து தேடி பார்த்தோம். அப்போது கடந்த மாதம் 29ஆம் தேதி POLIMER செய்தி ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் வெயில் காலம் - எது செய்யனும்? எது செய்யக்கூடாது? அமைச்சர் மா.சு., அட்வைஸ்.. என்ற தலைப்பில் ஒரு வீடியோவை பார்க்க முடிந்தது.
அதில் சரியாக 10.35 நிமிடத்தில், ”வெப்ப காலத்தில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறீர்கள், ஆனால் கடை திறந்து தான் இருக்கிறது” என்று அமைச்சரிடம் மா.சுப்ரமணியனிடம் நிரூபர் ஒருவர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளித்த அமைச்சர், ”விஷம் எல்லாம் கடைகளிலும் இருக்கிறது. நமக்கு தேவையானது தானே எடுத்து கொள்ள வேண்டும். நான் இதுவரைக்கும் மது வாசனையே அறியாதவன். வெத்தலை பாக்கு கூட போடாதவன். அதனால் 66 வயதில் என்னை ஏன் குடிக்காமல் இருக்குறீர்கள் என்று கேட்கலாமா” என கூறினார். இந்த பேட்டியில் ஒரு முறை கூட மெடிக்கல் ஷாப் என்ற வார்த்தையை அமைச்சர் பயன்படுத்தவில்லை என்பது தெரிகிறது.
கிடைத்திருக்கும் ஆதரங்களின் அடிப்படையில், மெடிக்கல் ஷாப் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் சொல்லாத வார்த்தையை, தினமலர் ஊடகம் அதை செய்தியாக வெளியிட்டுள்ளது. அதே போல் அந்த செய்தியை ஆராயாமல் நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட பலரும் அதை உண்மை போல் பரப்பி வருகின்றனர்.
முடிவு :
மெடிக்கல் ஷாப்பில் விஷம் விற்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியது போல் தினமலர் வெளியிட்ட செய்தி தவறானது.
