யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2020ஆம் ஆண்டில் வெளிச்சம் தொலைக்காட்சி சார்பில் வெளியிடப்பட்ட பழைய புகைப்படம் தற்போது தவறாகப் பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
இந்த அரசியல் அணுகுமுறை ஞாயம் தானா? அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது. தொகுதியின் மக்கள் பிரதிநிதி (MP) என்கிற முறையில்கூட தகவல் இல்லை. இது மாநில அரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப்படவில்லை. இந்த அரசியல் அணுகுமுறை ஞாயம் தானா? முதல்வரின் பார்வைக்கு.. - தொல் திருமாவளவன் எம்.பி
விரிவான விளக்கம்
"அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது. தொகுதியின் மக்கள் பிரதிநிதி (MP) என்கிற முறையில்கூட தகவல் இல்லை. இது மாநில அரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப்படவில்லை. இந்த அரசியல் அணுகுமுறை ஞாயம் தானா? முதல்வரின் பார்வைக்கு.." என்று குறிப்பிட்டு விசிக கட்சியின் தலைவரும், மக்களவை எம்பியுமான தொல் திருமாவளவன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் பரவி வரும் பதிவுகளில், "நாடாளுமன்றத்தில் அரியலூர் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி வேண்டுமென குறலெழுப்பி பெற்றுத் தந்தவர் எழுச்சி தமிழர். ஆனால் இந்த அரசு கூட்டணியில் இருந்தும் திராவிட மாடல் அரசு இவ்வாறு செய்கிறது" என்று குறிப்பிட்டு பரப்பப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது.

உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தில் குறிப்பிட்டிருப்பது போன்று, எம்பி திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் ஆய்வுசெய்து பார்த்ததில், அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்படுவது குறித்தும், இதுதொடர்பாக அவர் அரசை விமர்சித்தது தொடர்பாகவும் எந்தவொரு பதிவையும் அவர் பதிவிடவில்லை என்பதை அறியமுடிந்தது.
"வெளிச்சம்" என்று பரவி வரும் புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதால், இதுதொடர்பாக வெளிச்சம் தொலைக்காட்சியின் எக்ஸ் பக்கத்திலும் ஆய்வு செய்தோம். சமீபமாகவே பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது போன்ற பழைய வடிவில், நியூஸ் கார்டு எதுவும் தற்போது வெளியிடவில்லை என்பதை அறியமுடிந்தது. எனவே வெளிச்சம் தொலைக்காட்சியின் பழைய பதிவுகளை தேடிப் பார்த்தோம்.
கடந்த 2020ஆம் ஜூலை 06 அன்று, பரவி வரும் இதே புகைப்படம் "அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது. தொகுதியின் மக்கள் பிரதிநிதி (MP) என்கிற முறையில்கூட தகவல் இல்லை. இது மாநிலஅரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப்படவில்லை. இந்த அரசியல் அணுகுமுறை ஞாயம் தானா? முதல்வரின் பார்வைக்கு-தொல்.திருமாவளவன்" என்று குறிப்பிடப்பட்டு வெளிச்சம் தொலைக்காட்சியின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது. தொகுதியின் மக்கள் பிரதிநிதி (MP)என்கிற முறையில்கூட தகவல் இல்லை. இது மாநிலஅரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப்படவில்லை. இந்த அரசியல் அணுகுமுறை ஞாயம் தானா? முதல்வரின் பார்வைக்கு-தொல்.திருமாவளவன் @thirumaofficial pic.twitter.com/22tp12mHIF
— Velicham TV (@velichamtvtamil) July 6, 2020
இதன்மூலம் இது கடந்த 2020ஆம் ஆண்டில் பதிவிடப்பட்ட பழைய புகைப்படம் என்பதை தெளிவாக அறியமுடிகிறது. இந்நிலையில் பலரும் இது அரசை விமர்சித்து தற்போது வெளியிடப்பட்ட புகைப்படம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், அடிக்கல் நாட்டுவிழாவிற்கு எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை என எம்பி திருமாவளவன் திமுக அரசை விமர்சித்ததாகப் பரவும் புகைப்படம், கடந்த 2020 ஆம் ஆண்டில் பதிவிடப்பட்ட பழைய புகைப்படம் என்பதை அறியமுடிகிறது.
