யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் நீதிபதிக்கு குடிநீரில் எச்சில் துப்பி கொடுத்த முஸ்லீம் பியூன் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் நீதிமன்றத்தின் நீதிபதி அறையில், நீதிபதியின் இல்லத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர் கேனிலிருந்து தண்ணீர் எடுத்து வருமாறு அந்த நீதிபதி அவரின் முஸ்லீம் பியூனிடம் கேட்டபோது, அந்த ஜிஹாதி தண்ணீரை ஒரு கோப்பையில் ஊற்றி அதில் துப்பினார், பிடிபட்டார்.

விரிவான விளக்கம்
உத்தரப்பிரதேசத்தில் நீதிபதிக்கு குடிநீரில் எச்சில் துப்பி கொடுத்த முஸ்லீம் பியூன் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் பதிவுகளில், “உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் நீதிமன்றத்தின் நீதிபதி அறையில், நீதிபதியின் இல்லத்திலிருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர் கேனிலிருந்து தண்ணீர் எடுத்து வருமாறு நீதிபதி ஒருவர், அவரின் முஸ்லீம் பியூனிடம் கேட்டபோது, அந்த ஜிஹாதி தண்ணீர் கோப்பையில் எச்சில் துப்பினார், அப்போது பிடிபட்டார்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.
*உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் நீதிமன்றத்தின் நீதிபதி அறையில், நீதிபதியின் இல்லத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர் கேனிலிருந்து தண்ணீர் எடுத்து வருமாறு அந்த நீதிபதி அவரின் முஸ்லீம் பியூனிடம் கேட்டபோது, அந்த ஜிஹாதியை தண்ணீரை ஒரு கோப்பையில் ஊற்றி அதில் துப்பினார். pic.twitter.com/mqXhvcUlVc
— 🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷 (@Maha_Periyavaa) July 30, 2024
अखिर कब तक ?
— AJAY AWASTHI (@AJAYAWASTHI108) July 26, 2024
थूक जिहाद का बिल्कुल नया विडियो (July 2024 का) अलीगढ़ कोर्ट से।
न्यायालय के जज भी हुए थूक ज़िहाद का शिकार ▪︎▪︎▪︎
बेहद शर्मनाक
दुःखद है ▪︎ pic.twitter.com/Ct1IBSUWQ4
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், இது கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளதை அறியமுடிந்தது.
‘Amarujala’ ஊடகப் பக்கத்தில், பரவி வரும் வீடியோ குறித்து “பெண் நீதிபதியின் பியூனின் கேவலமான செயல் கேமராவில் சிக்கியது, வீடியோவைப் பார்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்” என்று குறிப்பிட்டு கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 05 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.
அதில், “பெண் நீதிபதி தனது சொந்த பியூன் மீது சந்தேகம் கொண்டிருந்தார். கடந்த சில நாட்களாக அவனது நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்களை அவர் கவனித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் பியூனிடம் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். ஊழியர் ஒரு கிளாஸ் தண்ணீரை அவரிடம் கொடுத்தபோது, அவர் ஏதோ விசித்திரமாக உணர்ந்தார். எனவே தனது போனை ரகசிய கேமராவாக பயன்படுத்தினார். நீதிபதியின் தண்ணீரில் துப்பியதற்காக பியூன் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அதில் ஊழியர் குறித்த விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே இதுகுறித்து மேலும் தேடினோம்.
தேடியதில், ‘Times of India’ ஊடக பக்கத்தில், பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு கடந்த 2019 மே 29 அன்று “உத்தரப்பிரதேசத்தில் ஒருவன் தனது முதலாளிக்கு கொடுத்த தண்ணீரில் எச்சில் துப்பினான்“ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தனர்,
அதில், “பெண் சிவில் நீதிபதிக்கு பியூன் கண்ணாடி கிளாஸில் எச்சில் துப்பிவிட்டு தண்ணீர் பரிமாறிய வினோத சம்பவம் குறித்து விசாரணை நடத்த அலிகார் மாவட்ட அமர்வு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக ஊடகப்பக்கங்களில் பரவலாக பகிரப்பட்ட பின்னர் வெளிச்சத்திற்கு வந்தது. விகாஸ் குப்தா உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுகுறித்து ஊழியர்கள் (Class IV Employees ) சங்கத்தின் தலைவர் உமா சங்கர் யாதவ் கூறுகையில், கடந்த இரண்டு மாதங்களாக அவர் துன்புறுத்தப்பட்டு வந்த நிலையில், குப்தாவின் மனநிலை சரியில்லை என்பதை அறிந்தேன் என்று கூறியுள்ளார்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் முஸ்லிம் அல்ல. அவரது பெயர் விகாஸ் குப்தா என்பதையும், நீதிபதிக்கு வழங்கிய தண்ணீரில் எச்சில் துப்பியது நிரூபிக்கப்பட்டதன் காரணமாக விகாஸ் குப்தா உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதையும் இந்த செய்திகளின் மூலம் அறியமுடிகிறது.
முடிவு:
நம் தேடலில், உத்தரப்பிரதேசத்தில் நீதிபதிக்கு வழங்கிய தண்ணீரில் எச்சில் துப்பிய ஜிகாதி என்று பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், குற்றம் சாட்டப்பட்டவர் முஸ்லிம் அல்ல என்பதையும் அறிய முடிகிறது.