யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ராஜ்பாக் டிபிஎஸ் பள்ளி ஆசிரியர் ‘ஷகீல் அகமது அன்சாரி வல்சாத்தின்’ இதயமற்ற செயல் என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை. இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது அல்ல.
பரவிய செய்தி
இது ராஜ்பாக் டிபிஎஸ் பள்ளி ஆசிரியர் ஷகீல் அகமது அன்சாரி வல்சாத்தின் இதயமற்ற செயல்.

விரிவான விளக்கம்
“ராஜ்பாக் டிபிஎஸ் பள்ளி ஆசிரியர் ஷகீல் அகமது அன்சாரி வல்சாத்தின் இதயமற்ற செயல்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றது. இதனை வலதுசாரிகள் பலரும் தங்கள் சமூக ஊடகப்பக்கங்களில் பரப்பி வருகின்றனர்.
*உங்கள் வாட்ஸ்அப்பில் எந்த எண்கள் மற்றும் குழுக்கள் இருந்தாலும், தயவுசெய்து இந்த வீடியோவை அனைவருக்கும் அனுப்பவும், இது ராஜ்பாக் டிபிஎஸ் பள்ளி ஆசிரியர் ஷகீல் அகமது அன்சாரி வல்சாத்தின் இதயமற்ற செயல். வைரலாகும் ஒரு வீடியோ பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது*
*உங்கள் வாட்ஸ்அப்பில் pic.twitter.com/L1p5h9P9GV
இது ராஜ்பாக் டிபிஎஸ் பள்ளி ஆசிரியர் ஷகீல் அகமது அன்சாரி வல்சாத்தின் இதயமற்ற செயல். வைரலாகும் ஒரு வீடியோ ஜிகாதிகளுக்கு மனதில் ஈரமே இருக்காதா pic.twitter.com/ClavEU2DBw
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ குறித்து கடந்த 2019-ல் இருந்தே பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது.

மேலும் தேடியதில், இது குறித்து “BBC News” கடந்த 2014 செப்டம்பர் 10 அன்று “எகிப்து அனாதை இல்ல காணொளி: குழந்தைகளை அடித்ததற்காக மேலாளருக்கு சிறைத்தண்டனை” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “கிசாவில் உள்ள மெக்கா அனாதை இல்லத்தில் நடந்த தாக்குதல்களின் காணொளி, அவரது மனைவியால் படம்பிடிக்கப்பட்டு கடந்த மாதம் (2014 ஆகஸ்ட்) ஆன்லைனில் வெளியிடப்பட்டது. குழந்தைகளை குச்சியால் அடிப்பதைக் காட்டும் வீடியோ வெளியானதை அடுத்து, ஒசாமா முகமது ஓத்மான் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். இவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது ” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போன்று “Egyptian Streets” ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியிலும், இது எகிப்து நாட்டில் உள்ள கிசாவில் எடுக்கப்பட்ட வீடியோ என்றும், வீடியோவில் குழந்தைகளை கொடூரமாக தாக்கியவர் பெயர் ஒசாமா முகமது ஓத்மான் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
நம் தேடலில், ராஜ்பாக் டிபிஎஸ் பள்ளி ஆசிரியர் ‘ஷகீல் அகமது அன்சாரி வல்சாத்தின்’ இதயமற்ற செயல் என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது அல்ல என்பதையும் அறிய முடிகிறது.