யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாடு முழுவதும் வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாகக் கூறி செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.
பரவிய செய்தி
மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல். திமுக ஆளும் கட்சி. இப்போது இதே காரணத்தை சொல்லி தேர்தலை புறக்கணிப்பாரா திரு எடப்பாடி பழனிச்சாமி.. அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடுவதை ஆனந்தமாக ரசித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அவ்வை சண்முக சாலையில் எம்ஜிஆர் மாளிகையில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாடி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை மறந்துவிட்டார்.

விரிவான விளக்கம்
தமிழ்நாடு முழுவதும் வருகின்ற டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைப்பெற உள்ளதாகக் கூறி நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.
பரவி வரும் பதிவுகளில், “மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல். திமுக ஆளும் கட்சி. இப்போதும் இதே காரணத்தை சொல்லி தேர்தலை புறக்கணிப்பாரா திரு எடப்பாடி பழனிச்சாமி?” என்று அதிமுகவை விமர்சித்து குறிப்பிடப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆய்வுசெய்து பார்த்ததில், தமிழ்நாடு முழுவதும் வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைப்பெற உள்ளதாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிபடுத்த முடிந்தது.

மேலும் இதுகுறித்து ஆய்வு செய்ததில், நியூஸ்18 தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில், “டிசம்பர் 27, 30-ல் உள்ளாட்சித் தேர்தல் | TN By Election 2019 Dates“ என்று குறிப்பிட்டு கடந்த 2019ஆம் ஆண்டில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. அவ்வாறு வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சரியாக 7:29 நிமிடத்தில் பரவி வரும் நியூஸ் கார்டு இடம் பெற்றிருந்ததை தெளிவாகக் காண முடிந்தது.
இதன்மூலம் 2019ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள செய்தியை தற்போது வெளியிடப்பட்டுள்ள செய்தி என்று கூறி சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாடு முழுவதும் வருகின்ற டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைப்பெற உள்ளது என்று கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி தவறானது என்பதை அறியமுடிகிறது.