
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பார்ப்பதற்கே நெஞ்சை பதற வைக்கும் காட்சியாக சாலையின் ஓரத்தில் பிறந்த பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தையை பெற்ற தாயை சுற்றி பலரும் சூழ்ந்த இருப்பது போன்ற வீடியோ சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மைன்புரி பகுதியில் ஒரு தாழ்த்தப்பட்ட ஏழை பெண்ணுக்கு அரசு...
பரவிய செய்தி

விரிவான விளக்கம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மைன்புரி பகுதியில் ஒரு தாழ்த்தப்பட்ட ஏழை பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ரோட்டில் பிரசவம் நடந்ததாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. ஃபேஸ்புக் முழுவதும் பரவி வரும் வீடியோ எங்கு, எப்பொழுது நிகழ்ந்தது, நிகழ்ந்த சம்பவத்திற்கு காரணம் என்ன என்பது குறித்த உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்த்தோம்.
2019 செப்டம்பர் 11-ம் தேதி டைம்ஸ் நவ் செய்தியின் யூட்யூப் தளத்தில் " Caught on camera: Pregnant woman delivers baby on hospital floor in Uttar Pradesh's Mainpuri " என்ற தலைப்பில் வெளியான செய்தியில் மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்ட தாய் சாலையில் குழந்தை பெற்ற சம்பவம் குறித்து கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 13-ம் தேதி navbharattimes என்ற செய்தி இணையதளத்தில் ஹிந்தி மொழியில் வைரலாகும் வீடியோவின் புகைப்படத்துடன் செய்தி வெளியாகி உள்ளது. அதில்,
" போகான் பகுதியின் கன்ஷிராம் காலனியில் வசித்து வரும் ஷைதான் சிங் என்பவர் கர்ப்பமாய் இருந்த தன் மனைவி மீராவை போகான் சி.ஹெச்.சி மையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். சி.ஹெச்.சி-யில் மீராவை அனுமதிக்க 2,000 ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால், அவரிடம் பணம் இல்லை என்ற காரணத்தினால் அவரின் மனைவியை அனுமதிக்கப்படவில்லை " .
அதன்பிறகு மாவட்ட மருத்துவமனைக்கு மீராவை அழைத்து சென்றுள்ளார். ஆனால் மருத்துவர்கள் மீராவை அனுமதிக்க மறுத்துள்ளனர். ஆகையால், மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த பொழுது மீராவிற்கு சாலையிலேயே ஆண் குழந்தை பிறந்து உள்ளது. திறந்த பகுதியில் குழந்தை பிறந்த நிலையில் தாயும், குழந்தையும் சாலையோரத்தில் இருப்பதை பலரும் கவனித்து உள்ளனர் " எனக் கூறப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்த பிறகும் 45 நிமிடங்கள் சாலையிலேயே இருந்துள்ளனர். மீராவின் சகோதரி ஷீலா குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி உள்ளார். இது நிகழ்ந்த பொழுது ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. பிரச்சனை பெரிதாய் ஆன பிறகே மீராவை மருத்துவனைக்குள் அழைத்து சென்றாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு வெளியே குழந்தை பிறந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதைத் தவிர்த்து, சமூக வலைதளங்களில் கூறுவது போன்று பாதிக்கப்பட்ட பெண் தாழ்த்தப்பட்ட பெண்ணா என்பது குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால், பணம் கேட்டு அனுமதிக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண்னின் கணவர் தெரிவித்து இருக்கிறார்.
பிற பகுதியில் நிகழ்ந்த சம்பவங்கள் :
மருத்துவமனையில் அனுமதிக்காமல் சாலையோரத்தில் பெண்கள் குழந்தையை பெற்றெடுக்கும் கொடுமை நடப்பது முதல் முறையல்ல. ஜனவரி 2019-ல் ஜம்மு காஷ்மீரில் உள்ள லால் டெட் மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்ட பெண் சாலையில் குழந்தை பெற்ற சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் காஷ்மீர் அரசியல் தலைவர்களின் கண்டங்களை பெற்றது.
Heart wrenching that a pregnant woman was turned away from a hospital which ironically is named after the great Kashmiri mystic saint Lal Ded . She later gave birth to a still born in frigid temperatures. Cannot even begin to fathom the pain & trauma the parents must feel. https://t.co/NizgjW46W4
— Mehbooba Mufti (@MehboobaMufti) January 19, 2019
2019 செப்டம்பர் 9-ம் தேதி வெளியான செய்தியில், அசாம் மாநிலத்தில் பிரசவ வலியில் இருந்த பெண்ணின் கணவர் 102 ஆம்புலனிற்கு அழைத்தும் வரவில்லை என்ற காரணத்தினால் தற்காலிக ஸ்ட்ரெக்ச்சரில் கொண்டு செல்லும் பொழுது குழந்தை பிறந்து உள்ளது. இதுபோன்ற பல சம்பவங்கள் அசாம் மாநிலத்தில் நிகழ்ந்து உள்ளது.

2017-ல் ஜெய்ப்பூரில் கர்ப்பமாய் இருந்த பெண் மருத்துவமனைக்கு சென்ற பொழுது பிரசவலி வரவில்லை நாளைக்கு வாருங்கள் என அனுமதிக்க மறுத்துள்ளனர். ஆனால், மருத்துவமனையை விட்டு செல்லும் பொழுதே சாலையில் பிரசவலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது.
2019 ஜனவரியில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜாலான் எனும் பகுதியில் பிரசவவலி உடன் வந்த பெண்ணிற்கு மருத்துவனையில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சாலையில் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அந்த பெண் 32 ரூபாய் மட்டுமே வைத்து இருந்த காரணத்தினால் அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்படவில்லை என நேரில் பார்த்தவர் கூறியுள்ளார்.
முடிவு :
நம்முடைய தேடலில், உத்தரப் பிரதேசத்தில் மைன்புரில் ஏழை பெண்ணிற்கு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டு சாலையில் குழந்தை பெற்றது நிகழ்ந்து உள்ளது. ஆனால், தாழ்த்தப்பட்ட பெண் என விவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால், பணம் கேட்டு அனுமதிக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண்னின் கணவர் மற்றும் செய்தியில் மூலம் தெரிய வந்துள்ளது.
பிரசவ வலியில் இருக்கும் பெண்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பது தொடர்பான சம்பவங்கள் பலமுறை நிகழ்ந்து உள்ளது. சாலையில் குழந்தையை பெற்ற நிகழ்வுகள் ஏராளம். முறையான மருத்துவ வசதி கிடைக்காமலும், பணத்தை எதிர் பார்க்கும் மருத்துவமனைகள் இருக்கும் வரை இக்கொடுமைகளுக்கு தீர்வென்பது ஏதுமிலை.
ஆதாரங்கள்
Woman delivers stillborn on road as Srinagar hospital refuses to admit her, doctor removed
Mainpuri: A woman suffering from pain was not admitted, delivery was done on the road, no one took care for 45 minutes
Assam: Woman gives birth on makeshift stretcher on way to hospital
Hospital refuses to admit woman, baby dies after she gives birth on road in Srinagar
Caught on camera: Pregnant woman delivers baby on hospital floor in Uttar Pradesh's Mainpuri