யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வக்ஃப் வாரியம் சொந்தம் கொண்டாடுவதால் நிலத்தைப் பதிவு செய்ய முடியாது எனச் சொன்ன அதிகாரியை எதிர்த்து மக்கள் போராட்டம் செய்ததாகப் பரவும் பொய்.
பரவிய செய்தி
வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடுவதால் நிலத்தை பதிவு செய்ய மறுத்த திராவிட அல்லக்கையை தான் மக்கள் புரட்டி எடுக்கின்றனர்...!

விரிவான விளக்கம்
வக்ஃப் வாரியம் சொந்தம் கொண்டாடுவதால் ஒரு நிலத்தை அதன் உரிமையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளர் மறுத்ததாகவும் அதனை மக்கள் போராட்டத்தின் மூலம் தட்டி கேட்டதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
அந்த வீடியோவில் பச்சை துண்டு அணிந்தவர்களில் ஒருவர் அதிகாரியைப் பார்த்து நீங்கள் தான் பதிவு செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளீர்கள். இப்போது மாற்றி மாற்றிப் பேசாதீர்கள் எனக் கேள்வி எழுப்புவதுடன் மிக கோபமாக பேசுகிறார்.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவில் அதிகாரி ஒருவரின் பெயர் ’செல்வ பாலமுருகன்’ எனச் சொல்வதைக் கேட்க முடிகிறது. இதனைக் கொண்டு தேடியதில், இந்த சம்பவத்திற்கும் வக்ஃப் வாரியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறிய முடிந்தது.
இது தொடர்பாகக் கடந்த (செப்.) 4ம் தேதி ‘விகடன்’ தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுக்காவில் சுமார் 3,800 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
இதில் ஏறக்குறைய 2,000 ஏக்கர் விவசாய நிலம் என்பதால் நிலத்தைக் கையகப்படுத்தக் கூடாது என விவசாயிகள் சார்பில் 2022-ம் ஆண்டு இறுதியில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அப்போது விவசாய நிலம் கையகப்படுத்த மாட்டாது என திமுக-வை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஆ.ராசா மக்கள் மத்தியில் உறுதியளித்துள்ளார்.

மேலும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்றும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் மட்டும் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நிலங்களைப் பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு இன்னும் நீக்காத நிலையில், அதன் உரிமையாளர்கள் சிலர் பத்திரப்பதிவு செய்யப் பதிவு அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது சார் பதிவாளர் செல்வ பாலமுருகன் பதிவு செய்ய மறுத்ததாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து விவசாயி சங்கத் தலைவர் குமார ரவிக்குமார் தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதுதான் பரவக் கூடிய இந்த வீடியோ. அரசு அதிகாரி மற்றும் காவலரிடம் முன் நின்று பேசுபவர்தான் ரவிக்குமார். இச்சம்பவத்தை வக்ஃப் வாரிய நிலத்துடன் தொடர்புப்படுத்தி மதப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்தி பரப்புகின்றனர்.
முடிவு:
வக்ஃப் வாரியம் சொந்தம் கொண்டாடுவதால் நிலத்தைப் பதிவு செய்ய முடியாது எனச் சொன்ன அதிகாரியை எதிர்த்து மக்கள் போராட்டம் செய்ததாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல.
இந்த வீடியோ கோவையில் தொழிற் பூங்கா அமைக்க விவசாய நிலம் கையகப்படுத்துவது தொடர்பான சம்பவத்தில் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்டது.