யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த கோரவிபத்தில் இதுவரை நிமிலேஷ், சாருமதி என்ற 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் என்ற மாணவனும் தற்போது உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தால், அங்கிருந்த மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்து கிடந்தன. இந்த விபத்தை வேடிக்கைப் பார்க்க வந்த ஒரு முதியவர், அந்த மின்சாரக் கம்பிகளின் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

விரிவான விளக்கம்
கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றின் வேன், இன்று (ஜூலை 08) காலை 7.45 மணியளவில் செம்மங்குப்பம் ரயில்வே பாதையை கடக்கும்போது, பயணிகள் ரயில் மோதியதில், பெரும் விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், இந்த விபத்தை வேடிக்கைப்பார்க்க சென்ற முதியவர் ஒருவரும், அங்கு கிடந்த மின்சார கம்பி தாக்கியதில் உயிரிழந்தாகக் கூறி விகடன் செய்தி வெளியிட்டுள்ளது.

உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இந்த கோரவிபத்தில் இதுவரை நிமிலேஷ், சாருமதி என்ற 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் என்ற மாணவனும் தற்போது உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே இதுவரை மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதை செய்திகளின் மூலம் அறிய முடிகிறது.
மேலும் இந்த விபத்தில் முதியவர் ஒருவரும் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில் அது குறித்தும் தேடியதில், சன் நியூஸ் ஊடகப் பக்கத்தில் இது தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதில், “என் பெயர் அண்ணாதுரை. நான் விபத்து நடந்ததும் ஒரு பயங்கர சத்தம் கேட்டதும், காயமடைந்தவர்களை காப்பாற்ற ஓடி வந்தேன். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் காயமடைந்தேன். மேலும் விபத்து நடந்த போது ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததை கவனித்தேன்“ என்றும் காயமடைந்த முதியவர் ஒருவர் சன் நியூஸ் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளதைக் காண முடிந்தது.
#WATCH | “குழந்தையை ஓடிப்போய் தூக்கலாம்னு போனேன்.. மேல இருந்து WIRE அறுந்து விழுந்துடுச்சு..”
கடலூர் பள்ளி வேன்-ரயில் விபத்தில் காயமடைந்த நபர் பேட்டி#SunNews | #CuddaloreAccident | #SchoolBusAccident pic.twitter.com/9ow8NSfocW
எனவே பள்ளி வேன் மீது ரயில் மோதிய இந்த விபத்தில், முதியவர் ஒருவரும் உயிரிழந்ததாகக் கூறி விகடன் வெளியிட்டுள்ள செய்தி தவறானது என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில், இந்த விபத்தை வேடிக்கைப் பார்க்க வந்த ஒரு முதியவர் ஒருவரும் உயிரிழந்ததாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.