
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Archive link
விரிவான விளக்கம்
இது தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் போடப்பட்ட சாலை என தமிழக பாஜக உடைய இளைஞரணி அமைப்பின் செயற்குழு உறுப்பினர் பானு மோகன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். மேலும், பாஜக ஆதரவாளர்கள் பலரும் இப்படத்தை தமிழ்நாட்டைக் குறிப்பிட்டு பரப்பி வருகிறார்கள்.
ஏன்டா மானத்த வாங்கிறீங்க!
உண்மையிலேயே தெரிஞ்சி செய்றீங்களா அல்லது தெரியாம செய்றீங்களா! டேய்? pic.twitter.com/ufwjC19tmM
— Subramanian Subra (@Subrama54344674) October 7, 2022
இது எங்க ?? திராவிட மாடலா இருக்குமா ? pic.twitter.com/XJAJRQiZYS
— 🚩 Mahesh M 🚩 (@mahesh74391485) October 6, 2022
Archive link
உண்மை என்ன ?
தமிழ்நாட்டில் போடப்பட்ட சாலை எனப் பரப்பப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், சில நாட்களுக்கு முன்பாக Punjabi University Patiala Confessions எனும் முகநூல் பக்கத்தில் இப்புகைப்படம் பதிவிடப்பட்டு இருக்கிறது.
Facebook link
இப்புகைப்படம் பஞ்சாப் மாநிலத்தில் எடுக்கப்பட்டதாகவும், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியைக் கேலி செய்யும் விதத்திலும் பல்வேறு பதிவுகள் வெளியாகி இருந்ததை நம்மால் பார்க்க முடிந்தது.
ஆகையால், மேற்கொண்டு தேடுகையில், " 2018 டிசம்பரில் ஜாக்ரன், நியூஸ் 18 இந்தி செய்தி இணையதளத்தில் வெளியான செய்தியில் இதே புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

செய்தியின்படி, " ஹரியானா மாநிலத்தின் ஃபதேகாபாத் மாவட்டத்தில் ஷேகுபூர் தாதுளி மற்றும் பனவாளி கிராமங்களுக்கு இடையே பொதுப்பணித்துறையால் போடப்பட்ட சாலையானது பல மரங்களை அகற்றாமல் போடப்பட்டதால் சர்ச்சையாகி இருக்கிறது.
சாலை நடுவே மரங்கள் இருப்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து, இச்சம்பவம் பொதுப்பணித்துறையினரின் கவனத்திற்கு சென்றது.

இந்த சாலை அமைப்பதற்கு முன்பாக மரங்களை அகற்றுவது தொடர்பாக வனத்துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கான அனுமதி கிடைக்கும் முன்பாகவே உதவிப் பொறியாளர் மற்றும் ஒப்பந்தாரர் சாலையை அமைத்துள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செயற் பொறியாளர் தெரிவித்து இருந்ததாக " செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
2018 டிசம்பரில் இச்சம்பவம் குறித்து ஹரியானாவைச் சேர்ந்த பஞ்சாப்கேசரி எனும் இணையதளத்திலும் புகைப்படங்கள் உடன் செய்தி வெளியாகி இருக்கிறது.
ஹரியானாவில் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2014ம் ஆண்டில் இருந்து அம்மாநிலத்தின் முதல்வராக மனோகர் லால் கத்தார் இருந்து வருகிறார்.
மேலும் படிக்க : தமிழ்நாடு மது இறக்குமதி வாகனம் அவசரம்.. பழைய ஃபோட்டோஷாப் படத்தை பரப்பும் பாஜக நிர்மல் குமார்!
மேலும் படிக்க : தங்கை மகளுடன் இருக்கும் ராகுலின் படத்தை தவறாகப் பரப்பிய பாஜகவினர்.. பதிவை நீக்கிய நிர்மல் குமார் !
மேலும் படிக்க : திமுக ஆட்சியில் ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ் கொண்டு வந்ததாக வதந்தி பரப்பும் பாஜகவினர்
கடந்த சில நாட்களாக, பாஜகவைச் சேர்ந்தவர்கள் பல்வேறு வதந்திகளை பரப்பி உள்ளனர். அதுகுறித்து நாம் பல கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், மரங்களை அகற்றாமல் போடப்பட்ட சாலையானது தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் போடப்பட்ட சாலை என தமிழக பாஜகவினர் பரப்பும் தகவல் வதந்தியே. இந்த சாலை பாஜக ஆளும் ஹரியானாவில் 2018ல் போடப்பட்டது என அறிய முடிகிறது.