யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சமூக அறிவியல் மற்றும் வரலாறு புத்தகத்தில் சோழர் மற்றும் பாண்டியர் பற்றிய பாடங்கள் இடம்பெற்றுள்ளன.
பரவிய செய்தி
சோழனுக்கும், பாண்டியனுக்கும் இடமில்லா பாடப்புத்தகத்தில் எதுக்கு பாபரும் அக்பரும்? தமிழனுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு?

விரிவான விளக்கம்
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் கீழ் வழங்கப்படும் பள்ளி பாடப் புத்தகங்களில் தமிழர்களான சோழர் மற்றும் பாண்டிய மன்னர்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெறவில்லை. ஆனால், இஸ்லாமிய மன்னர்களான பாபர், அக்பர் பற்றிய பாடங்கள் மட்டும் இடம் பெற்றுள்ளதாக வலதுசாரிகளால் சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
தமிழ்நாட்டில் வழங்கக்கூடிய பாடப் புத்தகத்தில் சேர, சோழ, பாண்டியர்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளதா என அரசு வழங்கக்கூடிய பள்ளி பாடப்புத்தகங்களை ஆய்வு செய்தோம்.
7ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் ’தென்னிந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்’ என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றுள்ளது (பக்.129).

இதேபோல் 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ’தொடக்கக்கால தமிழ்ச் சமூகமும் பண்பாடும்’ என்ற பாடத்தில் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர் பற்றிய வரலாறு இடம்பெற்றுள்ளது (பக்.42).

11ம் வகுப்பு வரலாறு புத்தகத்திலும் ‘பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள்’ என்கிற தலைப்பில் அவர்களின் ஆட்சி நிர்வாகம், பொருளாதாரம், நீர் மேலாண்மை என பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது (பக்.170).

மேலும் ’தென்னிந்தியாவில் சமூக உருவாக்கம்’ என்ற பாடத்திலும் மூவேந்தர்கள் பற்றிய பாடங்கள் உள்ளன (பக்.75,76). இவற்றைத் தவிர்த்து மற்றப்பாடங்களிலும் சோழர், பாண்டியர் பற்றிய குறிப்புகள் உள்ளன.
இவற்றிலிருந்து தமிழ்நாடு பள்ளி பாடப்புத்தகங்களில் சோழர் மற்றும் பாண்டியர்கள் பற்றிய பாடம் இடம்பெறவில்லை எனப் பரவும் தகவல் தவறானது என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
தமிழ்நாடு பாடப் புத்தகத்தில் சோழர், பாண்டியர் பற்றிய பகுதிகள் இல்லை என்று பரவக் கூடிய தகவல் தவறானது. 7, 9, 11ம் வகுப்பு புத்தகங்களில் அவர்கள் பற்றிய வரலாறு இடம் பெற்றுள்ளது.