யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனிப்பட்ட ரீதியில் ஒரு மாணவரிடம் ’திருவள்ளுவரை இதுபோல் காவி உடையுடன் வரையக் கூடாது’ என்று சொன்னதை அரசின் உத்தரவு என்று திரித்து செய்தியாக வெளியிடப்பட்டிருக்கிறது.
பரவிய செய்தி
இந்த வருசம் தொகுதியில எல்லா வீட்டுக்கும் காவி உடை அணிந்த திருவள்ளுவர் காலண்டர் தான், எவன் என்ன பன்னுவான்னு பாப்போம்.

விரிவான விளக்கம்
திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து காட்சிபடுத்தும் போக்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சைக்குள்ளான ஒன்றாக இருக்கிறது. கடந்த மே மாதம் தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட ‘திருவள்ளுவர் திருநாள் விழா’ அழைப்பிதழில் வள்ளுவரை காவி உடையில், பூணூல் அணிவித்து சித்தரித்திருந்தது பெரும் சர்ச்சையானது. திருவள்ளுவரை காவி உடையில் அடையாளப்படுத்துவது அவரை இந்துவாக காட்டும் முயற்சியின் அங்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு சென்னையில் நடத்தப்பட்ட கண்காட்சியையொட்டி, ‘மாணவர்கள் திருவள்ளுவர் படத்தை இனிமேல் காவி நிறத்தில் வரைய தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பதாக’ செய்தி பரப்பப்படுகிறது.

உண்மை என்ன:
பரப்பப்படும் News Card-ல் ’மாலை மலர்’ செய்தி நிறுவனத்தின் பெயர் இருப்பதால், உண்மையாகவே அந்நிறுவனம் இந்த News Card-டை வெளியிட்டிருக்கிறதா என்பதை தேடினோம். மாலை மலரின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ கணக்கில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி இந்த News Card பதிவிடப்பட்டிருப்பதை காண்கிறோம்.

மேலும் இது குறித்து தேடியதில், ’மாலை மலர்’ செய்தித்தளத்தில் இதுபற்றி ஒரு செய்தியைக் காணமுடிந்தது.
அதன்படி, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு அருகில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதால், ’திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா’ என்று தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படுகிறது.

இதனையொட்டி, அரசு சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து. இதில் மாணவ-மாணவியர்கள் வரைந்த திருவள்ளுவரின் படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு மாணவர் திருவள்ளுவர் காவி உடையில் காட்சிபடுத்தும் வகையில் வரைந்திருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால், அந்த படம் கண்காட்சி அரங்கில் இருந்து அகற்றப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்கப்பட்ட போது, ‘ஓவியம் வரைந்த அந்த பிள்ளையிடம் இம்மாதிரி வரையக் கூடாது என்று சொல்லி உள்ளோம்’ என்று பதிலளித்தார். ஆனால், இந்த செய்தியை ”மாணவர்கள் இனி திருவள்ளுவர் படத்தை காவி நிறத்தில் வரைய அரசு தடை” என்று தலைப்பை திரித்து ’மாலை மலர்’ செய்தி வெளியிட்டிருந்தது.
அடிப்படையில், 'மாலை மலர்’ வெளியிட்டிருந்த செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாகவும், தலைப்பு வேறொன்றாக திர்க்கப்பட்டதாகவும் இருந்தது. மேலும், இந்த திரிக்கப்பட்ட செய்தித் தலைப்பை அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் News Card-ஆகவும் வெளியிட்டிருக்கிறது 'மாலை மலர்’ நிறுவனம்.
முடிவு:
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனிப்பட்ட ரீதியில் அந்த மாணவரிடம் ’திருவள்ளுவரை இதுபோல் காவி உடையில் வரையக் கூடாது’ என்று சொன்னதை அரசின் உத்தரவு என்று திரித்து செய்தியாக வெளியிடப்பட்டிருக்கிறது