
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக ஆளும் கட்சி மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். திருப்பூர் பகுதியில் சிஏஏ-க்கு ஆதரவு தெரிவித்து கூடிய கூட்டத்தால் திருப்பூரே குலுங்கியதாக ஸ்ரீனிவாசன் பாஜக எனும் முகநூல் பக்கத்தில் சில புகைப்படங்களுடன்...
பரவிய செய்தி
திருப்பூர் குலுங்கியது.. CAB, NRC-க்கு ஆதரவாக மக்கள் கூடிய கூட்டம். திராவிடம் அதிர்ந்தது.
நாங்களும் போராடுவோம்.

Facebook link | archived link
விரிவான விளக்கம்

திருப்பூரில் சிஏஏ-க்கு ஆதரவு தெரிவித்து இந்து முன்னணி அமைப்பினர் பேரணி ஒன்றை நடத்தி உள்ளதாக தினமலர் இணையதளத்தில் டிசம்பர் 30-ம் தேதி வெளியாகி உள்ளது. அதில், " குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக, இந்து முன்னணி சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன் நேற்று மாலை (டிச.25) பேரணி துவங்கியது. பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்து வந்தனர். பேரணியில் 200 மீட்டர் நீள தேசியக் கொடியை ஏந்தியபடி சென்றனர் " என இடம்பெற்று உள்ளது.

இதேபோல் தினத்தந்தி செய்தியில், " திருப்பூர் குமரன் ரோடு வழியாக யுனிவர்செல் தியேட்டர் அருகே அமைக்கப்பட்டு இருந்த பொதுக்கூட்ட மேடைக்கு அருகே இந்து முன்னணியினர் ஊர்வலம் நிறைவடைந்தது. இந்த பேரணியில் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு மோடிஜி, அமித்ஷாஜி என்று கோஷமிட்டபடி சென்றதாக " வெளியாகி இருக்கிறது.
தவறான புகைப்படங்கள் :
திருப்பூரில் சிஏஏ-க்கு ஆதரவாக இந்து முன்னணியினர் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தியது உண்மை என்றாலும், ஆதரவு கூட்டத்தால் திருப்பூர் குலுங்கியதாக தவறான சில புகைப்படங்களை முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளனர்.

ஸ்ரீனிவாசன் பாஜக என்ற முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்த பொழுது, அவர் வெளியிட்ட நான்கு புகைப்படங்களும் அசாம் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தின் புகைப்படங்கள் என ஆதாரங்கள் கிடைத்தன. டிசம்பர் 28-ம் தேதி jansatta என்ற இணையதளத்தில், பாஜக ஆதரவாளர்கள் சாலையில் அணிவகுத்து செல்லும் முதல் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
Heard many times ~ a picture is worth a 1000 words!
I shall allow these pics to speak for themselves, today. This incredible surge of people at our Peace & Progress March at #Jagiraod today conveys a lot. #AssamAlwaysAhead @narendramodi @AmitShah @BJP4India @BJP4Assam pic.twitter.com/pvvyYcLH8n
— Himanta Biswa Sarma (@himantabiswa) December 27, 2019
Twitter link | archived link
அந்த இணையதள செய்தியில், சூரத்தின் பாஜக துணைத் தலைவர் தன் ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அடங்கிய பதிவை வெளியிட்டு இருந்தனர். அந்த பதிவில் உள்ள மூன்றாவது மற்றும் நான்காவது புகைப்படத்தையே திருப்பூரில் கூடிய கூட்டம் என பகிர்ந்து உள்ளனர்.

திருப்பூர் கூட்டம் என பகிரப்பட்ட தொகுப்பில் உள்ள 4-வது புகைப்படமும் அசாம் பாஜக கூட்டத்தில் எடுக்கப்பட்டவையே. திருப்பூரில் நடைபெற்ற ஆதரவு பேரணியில் வடமாநிலத்தவர்கள் அதிகம் கலந்து கொண்டதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. ஆகையால், அசாம் கூட்டத்தை திருப்பூர் கூட்டம் என பகிர்ந்து இருக்கலாம் அல்லது தெரிந்தே தவறாக பகிர்ந்து இருக்கக்கூடும்.
மேலும் படிக்க : குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மேற்கு வங்கத்தில் திரண்ட கூட்டமா ?
இதற்கு முன்பாக, மகாராஷ்டிராவில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பேரணியின் புகைப்படங்களைக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக மேற்கு வங்க மாநிலத்தில் கூடிய பிரம்மாண்ட கூட்டமென தவறாக பரப்பி இருந்தனர். இம்முறை அசாம் பாஜக கூட்டத்தை திருப்பூர் கூட்டம் எனப் பதிவிட்டு உள்ளனர்.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, சிஏஏ ஆதரவு கூட்டத்தால் திருப்பூர் குலுங்கியதாக பகிரப்பட்ட புகைப்படங்கள் அசாம் மாநிலத்தில் பாஜக கட்சியினர் நடத்திய ஆதரவு கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதை அறிய முடிந்தது.