யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஒரு கட்சிக் கொடியைக் கட்டி இருப்பதால் அதற்குக் கட்சி பொறுப்பாக முடியாது. யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் திருமாவளவன் கூறியுள்ளார்.
பரவிய செய்தி
காரில் கட்சி கொடி கட்டியதாலேயே தி.மு.க என முடிவுக்கு வந்துவிட முடியாது, இருப்பினும் நடவடிக்கை தேவை என திருமாவளவன் பேட்டி..

விரிவான விளக்கம்
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் சிலர், இளம்பெண்கள் சென்ற காரை விரட்டிச் சென்று வழிமறித்ததாக வீடியோ வெளியானது. தங்களது காரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதால் துரத்தியதாக இளைஞர்கள் தரப்பிலும், காரை இடிக்கவில்லை எனப் பெண்கள் தரப்பிலும் கூறப்பட்டு வந்தது. இளைஞர்கள் காரில் திமுக கொடி கட்டப்பட்டு இருந்த நிலையில், அது ஆளுங்கட்சி மீதான விமர்சனமாக மாறியது.
இந்நிலையில், காரில் திமுக கொடி கட்டப்பட்டு இருந்தது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்து என ’பாலிமர்’ நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில் “காரில் கட்சி கொடி கட்டியதாலேயே தி.மு.க என முடிவுக்கு வந்துவிட முடியாது, இருப்பினும் நடவடிக்கை தேவை என திருமாவளவன் பேட்டி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே தலைப்பைக் கொண்டு ’மாலை மலரும்’ செய்தி வெளியிட்டுள்ளது.
உண்மை என்ன?
பாலிமர் நியூஸ் வெளியிட்ட செய்தி குறித்த உண்மைத் தன்மையை அறிவதற்காக திருமாவளவன் பேசிய வீடியோக்களை ஆய்வு செய்தோம். நேற்றைய தினம் சென்னையில் செய்தியாளர் சந்தித்த போது ECR விவகாரம் குறித்து திருமாவளவன் பேசியுள்ளார்.
அவர் பேசிய வீடியோ வெளிச்சம் ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் உள்ளது. அதில், திமுக கொடி உள்ள கார் ECR-ல் பெண்கள் சென்ற வாகனத்தை வழிமறித்தது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்புகிறார்.
அதற்கு திருமாவளவன், “அது சம்பந்தமாக (ECR விவகாரம்) காவல்துறை ஒரு விளக்கத்தைத் தந்திருக்கிறது. சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வதற்குத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் வண்டியிலே ஒரு கட்சிக் கொடியைக் கட்டி இருப்பதால் அதற்குக் கட்சி பொறுப்பாக முடியாது. யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை அதிலே மெத்தனம் காட்டக் கூடாது. அவர்கள் மீதான நடவடிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
அதாவது, திமுக கொடி இருந்ததினால் அக்கட்சி செய்ததாகப் பொருள் கிடையாது எனக் கூறிவிட்டு, யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். திருமாவளவன் பேசியதை பாலிமர் ஊடகம் திரித்து தவறாகச் செய்தி வெளியிட்டுள்ளது. மாலை மலர் வெளியிட்ட செய்தியின் உள்ளே திருமாவளவன் கூறியது முழுமையாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் தலைப்பைத் தவறாகத் திரித்து வைத்துள்ளது.
மேற்கண்ட ஆதாரத்திலிருந்து திருமாவளவன் சொன்னதை ஊடகங்கள் திரித்து செய்தி வெளியிட்டுள்ளதை அறிய முடிகிறது. தற்போது இவ்வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முடிவு:
காரில் கட்சிக் கொடி கட்டியதாலேயே தி.மு.க என முடிவுக்கு வந்துவிட முடியாது என ECR விவகாரத்தில் திருமாவளவன் கூறியதாக பாலிமர் ஊடகம் வெளியிட்ட செய்தி தவறானது. திமுக கொடி இருந்ததினால் அக்கட்சி பொறுப்பாகாது என்றும் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் அவர் கூறியுள்ளார்.