யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கிறிஸ்துமஸ் பண்டிகை ‘போதீஸ்’ நிறுவனம் ரூ.50,000 வரை பரிசுத்தொகை வழங்குவதாக சமூக வலைத்தளத்தில் மோசடியான தகவல் பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
Pothys (போதீஸ்) - கிறிஸ்துமஸ் பரிசு. கேள்வித்தாள் மூலம் நீங்கள் ரூ. 50,000 பெற வாய்ப்பு கிடைக்கும்.

விரிவான விளக்கம்
பண்டிகைக் காலங்களில் உடை போன்ற நுகர்வுப் பொருட்களுக்கு முன்னணி நிறுவனங்கள் தள்ளுபடி சலுகைகள் அறிவிப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் டிசம்பர் மாதமான இந்த மாத இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை வரவிருக்கிறது. இதனை ஒட்டி, ஜவுளிக்கடை நிறுவனமான ’போதீஸ்’, இணையவழியில் கேள்விகள் கேட்டு அதில் சரியான பதிலளிப்பவர்களுக்கு ரூ.50,000 வரை பரிசுத்தொகை வழங்குவதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன?
இதுபோன்றதொரு பரிசுதொகை திட்டத்தை ‘போதீஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளதா என்று அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பார்த்தோம். இதுபோன்று எந்த அறிவிப்பும் ‘போதீஸ்’ நிறுவனம் செய்யவில்லை என்பதைக் காணமுடிகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மளிகை பொருட்களுக்கு, வீட்டு உபயோக பொருட்களுக்கு மட்டுமே சில தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருப்பதை காண்கிறோம். மற்றபடி, பணமாக பரிசுத்தொகை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
’போதிஸ்’ நிறுவனம் கொடுக்கும் பரிசு தொகை என்று பரப்பப்படும் அந்த வலைத்தளத்தின் லிங்கை கணினியில் கிளிக் செய்தோம். ஆனால் அந்த வலைத்தளத்திற்குள் நுழைய முடியவில்லை. மாறாக, கைபேசியில் அந்த லிங்கை கிளிக் செய்து பார்த்தோம். அப்போது அதில் நான்கு கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதை காண்கிறோம்.

நான்கு கேள்விக்களுக்கும் பதிலளித்ததும், “உங்கள் பதில் வெற்றிகரமாக சேமிக்கப்பட்டது. நீங்கள் ரூ.50,000 பெற வாய்ப்பு கிடைக்கும்” என்று பதில் வந்தது. மேலும், பரிசுத் தொகை உள்ள சரியான பெட்டியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்லி ஒன்பது பெட்டிகள் கொடுக்கப்பட்டது. அதில் சரியானதை நாம் தேர்ந்தெடுத்த உடன் “எங்கள் விளம்பரங்களைப் பற்றி நீங்கள் 5 குழுக்களுக்கோ அல்லது 20 நண்பர்களுக்கோ சொல்ல வேண்டும்” என்று செய்தி அனுப்பப்படுகிறது.

இதுபோன்று பரிசுத்தொகை பற்றிய செய்தி சமூக வலைத்தளத்தில் பரவுவது பற்றி ’போதீஸ்’ நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்தோம். ”நாங்கள் அதுபோல் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. அது போலியானது” என்று விளக்கமளித்தார்கள்.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, ‘போதீஸ்’ நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடியான தகவல் பரப்பப்படுவது தெரியவருகிறது. ஒரு மாதத்திற்கு முன்னர், ’சரவணா ஸ்ரோர்ஸ்’ நிறுவனத்தின் பெயரில் இதேபோல் மோசடியான தகவல் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முடிவு:
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ‘போதீஸ்’ நிறுவனம் ரூ.50,000 வரை பரிசுத்தொகை வழங்குவதாக சமூக வலைத்தளத்தில் மோசடியான தகவல் பரப்பப்படுகிறது. இதனை நம்பி தனிப்பட்ட தகவலை கொடுத்து, யாரும் ஏமாற வேண்டாம். இணையவழி மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.