YouTurn

அரசு பள்ளிகளில் 10,000 போலி ஆசிரியர்களா? உண்மை என்ன?

அரசு பள்ளிகளில் 10,000 போலி ஆசிரியர்களா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தருமபுரியில் பள்ளி ஒன்றில் ஆசிரியர் தனக்கு பதிலாக வேறொருவரை பாடம் நடத்த பயன்படுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து 10,000 போலி ஆசிரியர்கள் என அடிப்படை ஆதாரமற்ற செய்தி வெளியாகியது. அப்போதே இதற்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுவிட்டது.

பரவிய செய்தி

பத்தாயிரம் போலி ஆசியருக்கு சம்பளம் கொடுத்த மாடல், யார் வீட்டு பணம்

X link


விரிவான விளக்கம்

தமிழ்நாடு அரசு பள்ளியில் 10,000 போலி ஆசிரியர்கள் இருப்பதாக குமுதம் ஊடகத்தின் செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அதில், “தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் 10,000 போலி ஆசிரியர்கள்? 11,000 தொடக்கப் பள்ளிகளில் சுமார் 10,000 பள்ளிகளில் போலி ஆசிரியர்களை நியமித்து பணியாற்றி வைத்துள்ளதாக புகார்” எனக் கூறப்பட்டுள்ளது.

image.png

உண்மை என்ன?

பரவக் கூடிய செய்தி குறித்து தேடியதில், இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி குமுதம் ஊடகத்தில் வெளியிட்ட செய்தி என்பதை காண முடிந்தது. இத்தகைய செய்தி வெளியான போது இதற்கு மறுப்பு தெரிவித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

தருமபுரி மாவட்டம், ராமியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்த கே.பாலாஜி என்பவர் தனக்குப் பதிலாக வேறொரு நபரைக் கொண்டு வகுப்பறையில் பாடம் நடத்தியதாகப் புகார் வந்துள்ளது. இதனை மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி விசாரித்துச் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதற்கிடையில் தான் 10,000 போலி ஆசிரியர்கள் அரசு பள்ளியில் பணிபுரிவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளன. 

Image

தருமபுரியில் இத்தகைய சம்பவம் நடந்ததும், வேறு ஏதேனும் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமிக்கப்பட்ட 6,053 தற்காலிக ஆசிரியர்கள் தவிர, வேறு யாரேனும் பணிபுரிகின்றனரா என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களிடமும் அறிக்கை கேட்கப்பட்டது.

இது தொடர்பாகப் பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கடந்த நவம்பர், 13ம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், வேறு எந்த பள்ளியிலும் இம்மாதிரி போலி ஆசிரியர் பிரச்சனை நடக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், இம்மாதிரியான செயல்கள் குறித்து மாவட்ட கல்வி அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்காவிட்டால், தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்து தமிழ் திசை, தினகரன் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு அரசுப் பள்ளியில் 10,000 போலி ஆசிரியர் எனச் செய்தி பரவிய நிலையில் அப்போதே இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதே தவறான செய்தியை தற்போதும் பரப்பி வருகின்றனர்.

முடிவு: 

கடந்த ஆண்டு தருமபுரியில் பள்ளி ஒன்றில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் தனக்கு பதிலாக வேறொருவரை பாடம் நடத்த பயன்படுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து 10,000 போலி ஆசிரியர்கள் என அடிப்படி ஆதாரமற்ற செய்தி வெளியாகியுள்ளது. அப்போதே இதற்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுவிட்டது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.